செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மாகாண சபை தேர்தல் திகதியுடன் டெல்லி செல்கிறார் ஜனாதிபதி ரணில்

மாகாண சபை தேர்தல் திகதியுடன் டெல்லி செல்கிறார் ஜனாதிபதி ரணில்

1 minutes read

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க டெல்லிக்கு விஜயம் செய்ய உள்ளார்.

இவ்வார இறுதியில் இந்த விஜயம் இடம்பெற உள்ளதாக தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சி ஊடக பிரிவின் அதிகாரி, எதிர்வரும் 5 ஆம் திகதி புதன்கிழமை அல்லது 6ஆம் திகதி வியாழக்கிழமை ஜனாதிபதியின் இந்திய விஜயம் இடம்பெறலாம் என குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் டெல்லிக்கு விஜயம் செய்வதற்கான பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பிதழை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அண்மைய இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்திருந்தார்.

இந்நிலையில் இந்திய இல்லத்தில் கடந்த புதன்கிழமை விசேட இராப்போசண நிகழ்வு இடம்பெற்றது. இதில்  தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல  ரத்நாயக்க உள்ளிட்ட அரசின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துக்கொண்டிருந்தனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயல்பட டெல்லி ஆர்வமாக இருப்பதாக இந்திய தரப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் பிரதமர் நரேந்திர மோடி – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடையிலான இருதரப்பு சந்திப்பிற்கான முயற்சிகள் மிக நீண்டகாலமாக அரச தரப்பால் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் அது சாத்தியப்படவில்லை.

டெல்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட ஊடாகவும் இந்த இருதரப்பு சந்திப்புக்கு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டது.

அதே போன்று ஜனாதிபதி அலுவலக பிரதானி சாகல ரத்நாயக்க டெல்லிக்கு விஜயம் மேற்கொண்டு, முக்கிய சந்திப்புகளில் கலந்துகொண்டு, இரு நாட்டு தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பை ஏற்படுத்துவதற்கான  பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். ஆனால் டெல்லியிடமிருந்து உறுதியான அறிவிப்பு கிடைக்கப்பெறவில்லை.

இதற்கு பிரதான காரணமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர் கொழும்புக்கும் டெல்லிக்கும் இடையிலான உறவில் ஏற்பட்ட விரிசல்களே காரணமென தகவல்கள் வெளியாகின.

குறிப்பாக சீன உளவுக்கப்பலான யுவாங் வான் 5 ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கான விஜயம், இலங்கை மக்களின் எரிபொருள் நெருக்கடியை தீர்க்க ஒத்துழைப்பு வழங்கிய போதிலும், சீன கப்பல்களுக்கு அவற்றை வழங்கியமை என்பன காணப்பட்டன.

அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையில் 2017ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கூட்டு இணக்கப்பாடுகளுடனான 15க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் தொடர்பில் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றாமல் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான திட்டங்கள் இலங்கை தீவில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவும் டெல்லி கவலை தெரிவித்திருந்தது. அதேபோன்று சீனாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தைகளும் காரணமாகியது.

இவ்வாறு இலங்கை – இந்திய உறவில் ஏற்பட்ட விரிசல்கள் மற்றும் நீண்ட கவலைகளின் பின்னர்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க டெல்லிக்கு விஜயம் மேற்கொள்கிறார். இதன் போது பிரதமர் மோடியுடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடல்களின் போது மாகாண சபை தேர்தலுக்கான திகதி மற்றும் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமறைப்படுத்தி  தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் திட்டங்கள் குறித்தும் அறிக்க உள்ளதாக அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More