கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள தினத்தில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்பட மாட்டாது.
அத்தோடு உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இனியும் தாமதிக்கப்படாமல் விரைவில் ஆரம்பமாகும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று (25) செவ்வாய்கிழமை இடம்பெற்ற போது அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை திட்டமிட்ட படி மே மாதம் 29ஆம் திகதி நிச்சயம் இடம்பெறுமென கல்வி அமைச்சர் அமைச்சரவையில் தெரிவித்தார்.
பல்கலைக்கழக பேராசிரியர்கள் உள்ளிட்டவர்களுக்கு இதில் பாரிய பொறுப்புக்கள் காணப்படுகின்றன.
வெளிநாடுகளில் 20 வயதுக்குள் டிப்ளோமா கற்கையை நிறைவு செய்யக் கூடியவாறான கல்வி முறைமையே காணப்படுகிறது.
ஆனால் இலங்கையில் இதற்காக 4 ஆண்டுகள் பல்கலைக்கழகத்தில் கற்க வேண்டியுள்ளது. எனவே சாதாரண , உயர் பரீட்சைகளும் , பெருபேருகளை வெளியிடலும் தாமதடைந்தால் அது மாணவர்களின் எதிர்காலத்தை பாரதூரமாக பாதிக்கும்.
இதனைக் கருத்திற் கொண்டு சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பரீட்சைகள் ஆணையாளர் 24 ஆம் திகதி திங்கட்கிழமை விசேட கலந்துரையாடலை முன்னெடுத்துள்ளார்.
அதற்கமைய விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் வெற்றிகரமாக விரைவில் முழுமையாக ஆரம்பமாகும்.
தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக மாணவர்களை பயணக்கைதிகளாக்குவதை தடுப்பதற்கு அரசாங்கத்தினால் எடுக்கப்படக் கூடிய சகல முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.