செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நடை பயணத்தைக் குழப்பாதீர்! – மனோவிடம் சத்திவேல் கோரிக்கை

நடை பயணத்தைக் குழப்பாதீர்! – மனோவிடம் சத்திவேல் கோரிக்கை

2 minutes read

தமிழ் முற்போக்குக் கூட்டணியால் எதிர்வரும் 12 ஆம் திகதி முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ள நடை பயணத்தை ஒத்திவைக்குமாறு மலையக சமூக ஆய்வு மையத்தின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று (05) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“மலையகம் 200“ என்பது மலைகத் தமிழர்களின் வரலாற்றுப் பயணத்தின் அடையாளமாகும். மலையகம் 200 ஐ அடையாளப்படுத்தும் வரலாற்று பொறுப்பும் கடமையும் ஒவ்வொரு மலையத்தவருக்கும் உண்டு. அது ஒரு கூட்டு பொறுப்பாகும்.

மலையகம் 200 நடை பயணம் வரலாற்று கடமையுணர்வுடன் இடம்பெறுகின்றது. இதனை அடையாளப்படுத்தும் முகமாக நாம் நடத்தும் நிகழ்வுகள், செயற்பாடுகள் மலையக மக்களுக்குப் பாதிப்பையோ அல்லது அவர்களுக்குள் பிரிவினையையோ ஏற்படுத்த இடமளிக்கக் கூடாது.

கூட்டு சமூக ஒழுக்க நெறியை சிவில் சமூக அமைப்புக்களும், சமய அமைப்புக்களும், அரசியல் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் தனித்தனியாகவும் கூட்டாகவும் நிறைவேற்ற வேண்டும்.

நல்ல நோக்கில் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் “மலையகம் 200“ நிகழ்வுகளை நடத்திக்கொண்டிருக்கின்றனர். எனினும், இவை மலையகத்தின் எதிர்பார்ப்புக்கு, தேவைக்கு, அரசியல் பாதுகாப்புக்குப் போதுமானதாக இல்லை. நிறைவானதாகவும் இல்லை. இந்த நிகழ்வுகளின் சுய இலாபம் உள்ளதோடு கவர்ச்சிகளுக்குள்ளும் சிக்கியுள்ளது.

இதனால் ஒவ்வொருவரும் தமக்கான திசையைத் தெரியாது பயணிப்பது என்பது யானை தன் தலையில் மண்ணை அள்ளிக் கொட்டுவதற்குச் சமமாகும். மலையகத்தின் தலையில் மண்ணை அள்ளிக் கொட்டுவதற்கு மட்டும் இடமளிக்க முடியாது.

“மலையகம் 200“ அடையாளப்படுத்தி தலைமன்னாரில் இருந்து மாத்தளை வரையான நடைபயணம் கடந்த 28 ஆம் திகதி ஆரம்பமாகி இனம், மொழி, மதம் மற்றும் பிரதேசம் கடந்து மக்களின் ஆதரவோடு மாத்தளை நோக்கிப் பயணம் தொடர்கின்றது.

இந்த நடைபயணத்துக்கு பல்வேறு தரப்புக்களும் தமது ஆதரவை வழங்கியுள்ளன. இது வரவேற்கத்தக்கதாகும். இதன் நிறைவு நாள் எதிர்வரும் 12ஆம் திகதியாகும்.

ஆனால், அதே நாளில் நுவரெலியா – ஹட்டனை மையப்படுத்தி தமிழ் முற்போக்குக் கூட்டணி நடை பயணத்தைத் திட்டமிட்டு இருப்பது அனைவரது முகத்தையும் சுளிக்க செய்துள்ளது.

கீரைக்குக் கடைக்கு எதிர்க் கடை என்பது போல் ஒரு முதிர்ச்சி மிக்க தலைமைத்துவத்தைக் கொண்ட கட்சி போட்டியாக இன்னும் ஒரு நிகழ்வை ஆயத்தப்படுத்தி உள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஏற்கனவே திட்டமிட்ட விடயம் எனில் அது தவிர்க்க முடியாது. ஆனால், மன்னார் முதல் மாத்தளை வரையுமான நடை பயணம் ஆரம்பிக்கப்பட்டதன் இடை நடுவில் மலையகத்தில் தனது கட்சிக்கான ஆதரவைப் பெருக்கிக்கொள்ளவும் கட்சித் தலைவர்கள் தங்களது நட்சத்திரக் கௌரவத்தை அடையாளப்படுத்துவதற்கும் நிகழ்வை ஒழுங்கு செய்திருப்பது அரசியல் நாகரிகம் அல்ல என்பதுவே எனது கருத்தும் கவலையுமாகும்.

எனவே, தமிழ் முற்போக்குக் கூட்டணி மலையகத்திலும், மலையகத்துக்கு வெளியிலும் மக்கள் ஆதரவையும் கௌரவத்தையும் தக்கவைத்துக்கொள்ள எதிர்வரும் 12 ஆம் திகதி நடத்தத் திட்டமிட்டுள்ள நடை பயணத்தை வேறொரு தினத்துக்கு ஒத்திவைத்து மன்னார் முதல் மாத்தளை வரையிலுமான நடை பயணத்துக்குத் தமது பூரண ஆதரவை நல்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அத்தோடு தமிழ் முற்போக்குக் கூட்டணி மலையகத்தின் ஏனைய கட்சிகளையும், தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்து மத்திய மாகாணத்திலும், மலையக மக்கள் வாழும் ஏனைய மாகாணங்களிலும் நிகழ்வுகளை ஒழுங்கு செய்வதே சிறப்பாகும். – என்றுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More