“உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதளுடன் தொடர்புபட்ட புலனாய்வுப் பிரிவின் பிரதானி சுரேஷ் சலே ராஜபக்ஷக்களின் குடும்பப் பாதுகாவலன் என்பதால் சனல் 4 வெளியிட்டுள்ள காணொளி குறித்து நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஊடான விசாரணைகள் எப்படி நடத்தப்படும் என்பது எமக்குத் தெரியும். எனவே, சர்வதேச விசாரணையே வேண்டும்.”
– இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான இரண்டாம் விவாதத்தில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர், மேலும் கூறுகையில்,
“சனல் 4 வெளியிட்டுள்ள உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பான காணொளி தற்போது நாட்டில் முக்கிய விடயமாகிவிட்டது. சனல் 4 வெளியிட்டுள்ள காணொளி தொடர்பில் நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஊடாக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக அரசு கூறுகின்றது .தெரிவுக்குழுக்கள் எவ்வாறு செயற்படும் என்பதை நாம் அறிவோம். ஆகவே, சனல் 4 வெளியிட்ட விடயங்களை நாடாளுமன்றத் தெரிவுகுழு ஊடாக விசாரணை செய்வது பயனற்றது. எனவே, சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
புலனாய்வுப் பிரிவின் பிரதானியான சுரேஷ் சலே தொடர்பில் சனல் 4 காணொளியில் பல விடயங்கள் கூறப்பட்டுள்ளன. இவர் 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலத்தின்போது புலனாய்வுப் பிரிவில் இருந்து கொண்டு பொனிபஸ் பெரேரா என்பவருடன் ஒன்றிணைந்து தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். 2019 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சுரேஷ் சலே புலனாய்வுப் பிரிவில் அதிகாரம் படைத்தவராக்கப்பட்டார்.
புலனாய்வுப் பிரிவின் பிரதானி சுரேஷ் சலே ராஜபக்ஷக்களின் பாதுகாவலன். அத்துடன் ராஜபக்ஷக்களின் வீட்டில் மலசலகூடம் சுத்தப்படுத்துபவர். எனவே, சனல் 4 வெளியிட்டுள்ள காணொளியைச் சாதாரணமாக ஒதுக்கிவிட முடியாது. அது தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும். சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.” – என்றார்.