செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை “தமிழருக்கு நீதி கிடைக்கும் வரை போராடிக்கொண்டே இருப்போம்”

“தமிழருக்கு நீதி கிடைக்கும் வரை போராடிக்கொண்டே இருப்போம்”

1 minutes read

தமிழ் மக்களுக்கு உரிய நீதி  கிடைக்கும் வரை நாங்கள் ஓயாது போராடிக்கொண்டே இருப்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிக்குடிப் பகுதியில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 11 பேரின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் பிரத்தியேக செயலாளர் விமலநாதன் மதிமேனன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனும், உயிரிழந்தவர்களின் உறவினர்களும் மெழுகுதிரிகளை ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தினர்.

அதன் பின்னர் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்,

“களுவாஞ்சிக்குடியில் வைத்து 1987 ஆண்டு ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி எனது பெரியப்பா சக்கரவர்த்தி இராசமாணிக்கம் உட்படப் பலர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இதில் கொல்லப்பட்டவர்கள் அப்பாவி மக்கள். இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த கொல்லப்பட்ட மக்களுக்கான நினைவுத் தூபியை சி.மு.இராசமாணிக்கம் அமைப்பினர் 30ஆம் ஆண்டு நினைவேந்தலில் (2017) இவ்விடத்தில் அமைத்திருந்தனர்.

இன்று  உயிரிழந்தவர்களது 36ஆம் ஆண்டு நினைவு தினமாகும்.மறைந்த இராசமாணிக்கம் சக்கரவர்த்தியின் குடும்ப உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் ஏனையவர்களது பங்குபற்றலுடன் அஞ்சலி நிகழ்வை இன்று நடத்தினோம். ஆனால், இது போன்று  வடக்கு – கிழக்கில் கடந்த காலங்களில் இலட்சக்கணக்கில் பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர்.

இவ்வாறு கொல்லப்பட்ட மக்களுக்கு இன்று வரை நீதி எதுவும் கிடைக்காத சூழ்நிலையில் தொடர்ந்தும்  நீதியைக் கேட்டு மக்கள்  போராடிக் கொண்டிருக்கின்றார்கள். தமிழ் மக்களுக்கு உரிய நீதி  கிடைக்கும்வரை நாங்கள் ஓயாது போராடிக்கொண்டே இருப்போம் என்பதை இவ்விடத்தில் தெரிவிக்க விரும்புகின்றேன்.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More