அயல் வீட்டில் தண்ணீர் வாங்கிக் குடித்துவிட்டு படலைக்கு வெளியே வந்த மேற்படி குடும்பப் பெண் கீழே மயங்கி விழுந்துள்ளார். இந்நிலையில், அவரைத் தூக்கிக்கொண்டு அவரது வீட்டுக்குச் சென்றவேளை வீட்டின் வாசலில் அவர் உயிரிழந்துள்ளார்.
வட்டுக்கோட்டை – தொல்புரம் கிழக்கு, சுழிபுரம், சிவபூமியடி பகுதியைச் சேர்ந்த இராசேந்திரம் செல்வநிதி (வயது 49) என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மேற்படி பெண் அவரது அயல் வீட்டுக்காரருடன் பேசுவதில்லை. இந்நிலையில், இன்று அவரது வீட்டில் இருந்து சுமார் 30 மீற்றர்கள் தூரத்தில் உள்ள அயல்வீட்டுக்குச் சென்று தண்ணீர் தருமாறு கேட்டு வாங்கி குடித்துவிட்டு தனது வீட்டுக்குச் செல்வதற்கு வெளியே வந்துள்ளார்.
அவ்வேளை அவர் வீதியில் மயங்கி விழுந்துள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் அவரைத் தூக்கி அவரது வீட்டுக்குக் கொண்டு செல்லும்போது அவர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் கணவன் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
மேற்படி பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு, கணவர் அவரைத் தாக்குவதாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் தாயார் வழமையாகப் பாவிக்கும் மாத்திரைகளை விழுங்கி விட்டு அயல்வீட்டுக்குச் சென்றார் என்று அவரது மகள் தெரிவிக்கின்றார்.
இது கொலையா அல்லது இயற்கைச் சாவா என்ற விபரங்கள் வெளியாகவில்லை. வட்டுக்கோட்டை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சடலம், உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.