செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மக்களைப் பொருளாதாரத்தில் பங்குதாரர்களாக்குவோம்! – ரணில் உறுதி

மக்களைப் பொருளாதாரத்தில் பங்குதாரர்களாக்குவோம்! – ரணில் உறுதி

2 minutes read

கல்வி, காணி, வீடு, வியாபார உரிமைகளை உறுதிப்படுத்தி மக்களை பொருளாதாரத்தில் வலுவான பங்குதாரர்களாக மாற்றிக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார்.

பொருளாதாரத்தின் பங்குதாரர்களாக மக்களை மாற்றுவதன் மூலம், சரிவடையாத வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கொழும்பு முகத்துவாரத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ரன்திய உயன வீட்டுத் தொகுதியை பயனாளிகளுக்குக் கையளிக்கும் நிகழ்விலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

இதன்போது 2010 ஆம் ஆண்டில் கஜீமாவத்தையில் தீக்கிரையான வீடுகளுக்கு பதிலாக 294 வீடுகள் அடங்கிய இந்த வீட்டுத்தொகுதியை ஜனாதிபதி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு கையளித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,

“பத்து வருடங்களுக்கு மேலாக காஜிமாவத்தை மக்கள் நரகத்தில் வசித்துள்ளனர். அந்த வாழ்க்கையை கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. அதனால் இந்த குடியிருப்புகளை மக்களுக்கு விரைவில் கையளிக்க முடிந்துள்ளதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றோம். முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க இது தொடர்பில் அதிக அக்கறை காட்டினார். இன்று நீங்கள் பெற்றுகொள்ளும் இந்த வீடு உங்களுக்கு மிகவும் மதிப்புள்ள சொத்தாகும். அதனைப் பாதுகாப்பது உங்கள் பொறுப்பு. கடந்த பத்து வருடங்களாக கஷ்டப்பட்ட நீங்கள் இந்த வீடுகளை அடகு வைக்கவோ விற்கவோ கூடாது. இந்த வீடுகளை உங்கள் உயிரைப் போல பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இன்று வரையிலான இரண்டு வருடங்களுக்குள் நிம்மியாக மூச்சு விடக்கூடிய சூழலை எம்மால் உருவாக்க முடிந்துள்ளது. உணவு, எரிவாயு, எரிபொருள் வரிசையில் நின்று அவதிப்பட்ட மக்கள் இன்று சுமூகமாக வாழ்கின்றனர். வரிசையில் யுகத்தில் கொழும்பு மக்கள் பெரும் அவதிப்பட்டனர். அதிலிருக்கும் மாடிக்குடியிருப்புகளிலும், தோட்டங்களிலும் வசிக்கும் மக்களும் கடும் அவதிக்குள்ளாகினர்.

பொருளாதாரத்தைப் பலப்படுத்த நாம் அமுல்படுத்திய வரிக் கொள்கை வாழ்க்கைச் சுமையை மேலும் அதிகப்படுத்தியது. ஆனால் அந்த கஷ்டங்களை நீங்கள் தாங்கிக் கொண்டதாலேயே, கடன் வாங்காமலும், பணம் அச்சடிக்காமலும் அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்க முடிந்தது. அதனால் தான் இந்த வருடத்தில் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க முடிந்தது. ரூபாவின் பெறுமதியும் வலுவடைந்துள்ளது.

அவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்றிக் கூறும் வகையிலேயே நிரந்தர காணி உரிமை, நிரந்தர வீட்டுரிமையை வழங்குவதாக கருதுகிறேன். எதிர்காலத்தில் 50,000 வீடுகள் மக்களுக்கு கையளிக்கப்படும். நான் பிரதமராக பதவி வகித்த காலத்தில் சீன அரசால் வழங்கப்பட்ட 1996 வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளையும் இரண்டு வருடங்களுக்குள் நிறைவு செய்ய எதிர்பார்க்கின்றோம்.

காணி, வீட்டு உரிமைகளுக்கான நிரந்தர உரிமைகள் இதற்கு முன்னதாக வழங்கப்படவில்லை. எதிர்காலத்தில் கல்வி,காணி, வீட்டு, வியாபார உரிமைகளை மக்களுக்கு வழங்கி பொருளாதாரத்தை மக்கள் பக்கம் விரிவுபடுத்தி நாட்டின் பொருளாதாரத்திற்கான பெரும் பங்களிப்பை அதனூடாக பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கிறேன்.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More