செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழு தலைவர் தெரிவு தள்ளிப் போனது!

கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழு தலைவர் தெரிவு தள்ளிப் போனது!

2 minutes read
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெயரில் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் தலைவர் தெரிவு தொடர்பான கூட்டம் நடைபெற்ற போதும் புதிய தலைவர் தேர்வு இடம்பெறவில்லை. அது தள்ளிப்போனது. இலங்கைத் தமிழரசுக் கட்சி, கட்சி ரீதியாக ஒன்று கூடி ஆராய்ந்து ஒரு முடிவெடுத்த பின்னர், இது பற்றித் தீர்மானிப்பதாக மேற்படி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதுவரை காலமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருந்த இரா.சம்பந்தன் காலமானமையை அடுத்து இந்தப் பதவி வெற்றிடமாகியுள்ளது.

இந்தப் பதவிக்கு தம்மைத் தெரிவு செய்யும்படி கோரி ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தி வந்தார்.

இந்நிலையில், நேற்றுப் பிற்பகல் நாடாளுமன்றத்தில் கூட்டமைப்பு எம்.பிக்களின் கூட்டம் நடைபெற்றது. சித்தார்த்தனைத் தவிர ஏனையோர் பிரசன்னமாகி இருந்தனர்.

கூட்டத்தின் ஆரம்பத்தில் மேற்படி தலைமைப் பதவிக்குத் தன்னுடைய பெயரை செல்வம் அடைக்கலநாதன் தாமே பிரேரித்தார்.

அது குறித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிவஞானம் சிறீதரன் ஆரம்பத்தில் கருத்து வெளியிட்டார். அதனையே தமிழரசுக் கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுபட்டு வழிமொழிந்தனர் எனத் தெரியவந்தது.

“செல்வம் தலைவராக இருப்பதில் ஆட்சேபனை ஏதுமில்லை. அவர் தலைவராக இருக்க, இதுவரை காலமும் இப்ப பணியை சம்பந்தன் சார்பில் ஆற்றி வந்த சுமந்திரனே அவற்றைத் தொடர்ந்து செய்யலாம். இருவரும் இணைந்து இந்தப் பணியை முன்னெடுக்க முடியும். முன்னெடுக்க வேண்டும். ஆயினும், செல்வமும் ஏனையோரும் இப்போது ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி என்ற ஒரு புதிய கூட்டமைப்பை உருவாக்கி அதில் செயற்படுகின்றனர் என அறிவித்திருக்கின்றார்கள். அவர்கள் அதில் இருந்து கொண்டு இங்கு தமிழரசுக் கட்சியின் பெயரில் இருக்கும் நாடாளுமன்றக் குழுவுக்குத் தலைமை தாங்க முடியாது. கூட்டமைப்பில் இருந்து கொண்டு தலைமை தாங்குவது வேறு. வேறு ஒரு கூட்டணியில் இருந்து கொண்டு இதற்குத் தலைமை தாங்குவது வேறு. அப்படி அவர்கள் தலைமை தாங்குவதானால் அது குறித்து தமிழரசுக் கட்சியில் கட்சி ரீதியாக நாங்கள் சில விடயங்களை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.” – என்று சிறீதரன் தெளிவாக வலியுறுத்தினார்.

சுமந்திரனும் அக்கட்சியின் ஏனையோரும் அதே நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர்.

கூட்டமைப்பின் பெயரில் சுரேஷ் பிரேமச்சந்திரன் தரப்பை இணைத்துக் கொள்வதில் சிறீதரன் கடுமையான ஆட்சேபனைகளை இந்தக் கலந்துரையாடலில் அடிக்கடி வெளிப்படுத்தினார்.

தங்களுடைய ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியைக் கைவிட்டு வர முடியாது, அதன் பெயரிலேயே செயற்படுவோம் என்ற உறுதியான நிலைப்பாட்டைச் செல்வம் தரப்பினர் வெளிப்படுத்தியமையால் தலைவர் தெரிவு முடிவெடுக்கப்படாமல் தள்ளிப் போயிற்று.

இறுதியில் தமிழரசுக் கட்சி, கட்சி ரீதியாக கூடி இந்த விடயத்தில் ஒரு முடிவை எடுத்து அறிவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More