– இவ்வாறு பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில எம்.பி. தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“அரசமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் என்று நாட்டு மக்கள் எதிர்பார்த்துள்ள நிலையில் மக்களைக் குழப்பத்துக்குள் தள்ளும் வகையில் அரசமைப்பின் 22 ஆவது திருத்தம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அரசமைப்பின் 19 ஆவது திருத்தம் உருவாக்கப்படும்போது அதன் 83 (ஆ) உறுப்புரையைத் திருத்தம் செய்ய மறந்து விட்டோம். ஆகவே, மன்னித்து விடுங்கள் என்று குறிப்பிட்டுக் கொண்டு 22 ஆவது திருத்தத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொண்டு வந்துள்ளார்.
22 ஆவது திருத்தம் பற்றி ஜனாதிபதி குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது. ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் அரமைப்பின் 30 (2) உறுப்புரை திருத்தப்பட்டு 6 வருட பதவிக் காலம் 5 வருடங்களாகக் குறைக்கப்பட்டது. ஆகவே, 83(ஆ) உறுப்புரையில் 6 வருடங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதைத் திருத்தம் செய்தாலும், செய்யாவிடினும் எவ்வித பயனும் கிடைக்காது. அதனால் ஜனாதிபதித் தேர்தலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.இதனை உயர்நீதிமன்றம் பலமுறை உறுதிப்படுத்தியுள்ளது.
அரசமைப்பின் 19 ஆவது திருத்தத்தில் 83 (ஆ) உறுப்புரையைத் திருத்தம் செய்ய முடியாமல் போனது என்று குறிப்பிடுவதை ஏற்க முடியாது. அந்த உறுப்புரையைத் திருத்தம் செய்ய நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மக்கள் வாக்கெடுப்புக்கும் செல்ல வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதால் அவ்விடயம் குறித்து அவதானம் செலுத்தவில்லை. தேசிய கீதம், தேசியக் கொடி உட்பட நாட்டின் ஒருமைப்பாடு உள்ளிட்ட விடயங்களில் மாற்றம் ஏற்படுத்த வேண்டுமாயின் சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும்.
சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லாமல் 22 ஆவது திருத்தத்தை எளிய பெரும்பான்மையுடன் நிறைவேற்ற அரசு முயற்சிக்கின்றது. மக்கள் வாக்கெடுப்புடன் 22 ஆவது திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற தீர்ப்பைப் பெறுவதற்காக இந்தச் சட்டமூலத்தை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவோம். அதேபோல் இந்தச் சட்டமூலத்துக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைப்பதையும் இல்லாதொழிப்போம். மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற 150 உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும். அரசிடம் பெரும்பான்மை கிடையாது. நாட்டுப் பற்று உள்ளவர்கள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.” – என்றார்.