செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 92 எம்.பிக்கள் ரணிலுக்கு ஆதரவு!

92 எம்.பிக்கள் ரணிலுக்கு ஆதரவு!

2 minutes read
ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 92 பேர் நேற்று மாலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவரின் வெற்றிக்கு நிபந்தனையின்றி ஆதரவு வழங்குவதாக அறிவித்தனர்.

மீண்டும் அராஜகமற்ற, வரிசை யுகம் இல்லாத சமூக, அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார அபிவிருத்தியுடன் கூடிய நாட்டைக் கட்டியெழுப்ப கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டுமே என்றும், அதனால் தனிப்பட்ட அரசியல் நோக்கங்களை விடுத்து நாட்டுக்காக தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

தாம் கஷ்டப்பட்டு கட்டியெழுப்பிய கட்சியைப் பற்றி சிந்திக்காமல் ஒரு சிலரது கோரிக்கைக்கு அமைவாக எடுக்கப்பட்ட தீர்மானத்தை நிராகரித்துவிட்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்தச் சந்திப்பில் கலந்துகொள்வதாகச் சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபைகள், உள்ளூராட்சி பிரதிநிதிகள் உட்பட கட்சியின் கீழ் மட்ட உறுப்பினர்கள் இந்தத் தீர்மானம் சரியானது என்பதை உறுதி செய்துள்ளனர் என்றும் அவர்கள் கூறினர்.


நாட்டின் பொருளாதாரம், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீதியில் கொல்லப்பட்ட போது இரண்டு வருடங்களில் நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாடுபட்டதையும் அவர்கள் நினைவுபடுத்தினர் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 2022ஆம் ஆண்டு நாடு பாரிய அரசியல் மற்றும் பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்தபோது, நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பைத் தான் தனியாக ஏற்கவில்லை என்றும், நாட்டை நேசித்த திறமையான குழுவினர் தன்னுடன் இணைந்துகொண்டனர் என்றும் தெரிவித்தார்.

அவர்கள் தமது பொறுப்பைச் சரியாக நிறைவேற்றினர் என்றும், அந்தக் குழுவினராலேயே நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நாட்டைக் கட்டியெழுப்ப தமக்கு ஆதரவளிக்குமாறு தான் முதலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரியதையும் நினைவு கூர்ந்த ஜனாதிபதி, அன்று எடுத்த சரியான தீர்மானத்துக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.

அமைச்சர்களான அலி சப்ரி, ரமேஷ் பத்திரன, இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி. திஸாநாயக்க, எஸ்.எம். சந்திரசேன, அனுரபிரியதர்சன யாப்பா, பிரியங்கர ஜயரத்ன, டி.பி. ஹேரத், மஹிந்தானந்த அளுத்கமகே, பிரேமநாத் சி.தொலவத்த, ஜானக வக்கும்புர, ஜோன் செனவிரத்ன, டக்ளஸ் தேவானந்தா, மதுர விதானகே, ராஜிகா விக்கிரமசிங்க உள்ளிட்ட பலரும் இங்கு கருத்துத் தெரிவித்தனர்.

பிரதமர் தினேஷ் குணவர்தனவும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More