வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்நோக்கி இருந்த நிலையில் இன்று முதல் மீண்டும் வைத்தியர்கள் சேவைக்குத் திரும்பியுள்ளமையை நோயாளர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.
யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகத்துக்கு எதிராக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கடந்த வியாழக்கிழமை முதல் பணிப்புறக்கணிப்பு தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்திருந்தது.
இதனால் வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்கு வந்த நோயாளர்கள் பலரும் சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் பல்வேறு பாதிப்புக்களை எதிர்கொண்டு வீடுகளுக்குத் திரும்பிச் சென்றிருந்தனர்.
இந்நிலையில், வைத்தியசாலை நிர்வாகத்தினருக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற பேச்சுகளின்போது ஓரளவு இணக்கம் காணப்பட்டது.
இதையடுத்து நோயாளர்களின் நலன் கருதி தமது பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மேற்கொள்ளப் போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிக்கை ஊடாக அறிவித்திருந்தது.
இதற்கமைய யாழ். போதனா வைத்தியசாலையின் மருத்துவ சேவைகள் அனைத்தும் இன்று முதல் வழமைக்குத் திரும்பியுள்ளன.
இதனால் கடந்த இரண்டு நாட்களாகப் பெரும் அவதியை எதிர்நோக்கியிருந்த நோயாளர்கள் பலரும் இன்று தமக்கான சிகிச்சைகளைப் பெற்றுக்கொண்டமையால் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
எனினும், எதிர்காலத்தில் நோயாளர்களைப் பாதிக்காத வகையில் வைத்தியசாலையின் அனைத்து தரப்பினர்களும் செயற்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.