மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் வாள் வெட்டு சம்வம் தொடர்பில் முறையாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்ய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டணி உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (04) ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை எழுப்பி உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரையம்பதி பிரதேசத்தில் கடந்த மாதம் 20ஆம் திகதி வாள்வெட்டு குழுவினால் அங்கு வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றது.
இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்யாமல் இருப்பது தொடர்பில் மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.
அத்துடன் கைதுசெய்யப்படாமல் இருப்பது தொடர்பில் மக்கள் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவும் கல்லடி நகரிலும் வாள்வெட்டு குழுவொன்று மட்டக்களப்பு நகரில் வாள்வெட்டு சம்பவம் ஒன்றை மேற்கொண்டிருக்கிறது.
ஜனாதிபதி இந்த சபையில் வந்து இறுதியாக உரையாற்றும்போது பாதாள குழுக்களால் மட்டக்களப்பு நகரிலும் பாதாள சம்பவங்கள் இடம்பெறலாம் என தெரிவித்திருந்தார்,
அதனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் இவ்வாறான சம்பவம் தொடர்பில் விடயத்துக்கு பொறுப்பான் அமைச்சர் கூடிய கவனம் செலுத்தி, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டு்ம் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.