மட்டக்களப்பு, சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொறக்கொட்டாஞ்சேனையில் உள்ள காட்டுப் பகுதியில் இன்று சனிக்கிழமை காலை ஆண் சிசு ஒன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
காட்டுப் பகுதியில் ஆண் சிசு ஒன்று சடலமாகக் கிடப்பதைக் கண்ட பிரதேச மக்கள் பொலிஸாருக்கு உடனடியாகத் தகவல் வழங்கினர்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த சந்திவெளி பொலிஸார், சிசுவின் சடலத்தை மீட்டு அதைப் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.
இந்த ஆண் சிசுவைப் பெற்றெடுத்த தாய், சிசுவை உரைப்பையில் கட்டி அதனை மொறக்கொட்டான்சேனை காட்டுப் பகுதியில் வீசிவிட்டுச் சென்றுள்ளார் என்று பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த ஆண் சிசு சம்பவ தினத்தன்று பிறந்துள்ளது என்றும், சிசுவின் தாயைத் தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சந்திவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.