பொகவந்தலாவை, தெரேசியா தோட்டப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து கணவனும், மனைவியும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து, சடலங்கள் இருப்பதைப் பொதுமக்கள் அவதானித்தனர். பின்னர் பொகவந்தலாவைப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு விரைந்த பொகவந்தலாவைப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
சடலங்களுக்கு அருகாமையில் நஞ்சுப் போத்தல் ஒன்று இருந்தது எனக் கூறப்படுகின்றது.
சடலமாக மீட்கப்பட்ட பெண் சிறிது காலம் கொழும்பு பகுதியில் கூலி தொழில் செய்து வந்தார் என்றும், அவர் கொழும்பில் இருந்து தனது வீட்டுக்கு வருகை தந்து நான்கு நாட்கள் கடந்துள்ளன என்றும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த இரண்டு சடலங்கள் தொடர்பாக சந்தேகம் எழுந்துள்ளது என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
38 வயது கணவனும், 37 வயதான மனைவியுமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
இருவரின் சடலங்களும் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளைப் பொகவந்தலாவைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.