ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை ஹோட்டல் ஒன்றில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 30 வயதுடைய சந்தேக நபரை எதிர்வரும் 27ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவான் இன்று திங்கட்கிழமை (17) உத்தரவிட்டார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
பொலிஸ் உத்தியோகத்தர் நோன்பு முடிப்பதற்காக சம்பவதினமான இன்று அதிகாலை ஹோட்டல் ஒன்றுக்கு சென்று சாப்பிட்டுக் கொண்டிருந்துள்ளார்.
இதன்போது சந்தேக நபரின் கால் சாப்பிட்டுக் கொண்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தரின் காலில் தட்டுப்பட்டதையடுத்து மோசையிலிருந்த தண்ணீர் கோப்பை கீழே விழுந்துள்ளது.
பின்னர் சந்தேக நபர் தெரியாமல் தட்டுப்பட்டுவிட்டதாகக் கூறி பொலிஸாரிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
இதன்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்தர்கம் கைகலப்பாக மாறியதையடுத்து பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்து மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து பொலிஸாரை தாக்கிய சந்தேக நபரும் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பின்னர் சந்தேக நபருக்கு எதிராக ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் குற்றப்பத்திரிக்கை ஒன்றைத் தாக்கல் செய்ததையடுத்து நீதவான் வைத்தியசாலைக்குச் சென்று சந்தேக நபரைப் பார்வையிட்ட பின்னர் அவரை எதிர்வரும் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.