“நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் உள்ள சபைகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கத் தமிழ் மக்கள் ஆணை வழங்க வேண்டும்.”
– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்தார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, பச்சிலைப்பள்ளி ஆகிய இரண்டு பிரதேச சபைகளுக்குமான வேட்புமனுக்களை இலங்கைத் தமிழரசுக் கட்சி இன்று தாக்கல் செய்தது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன் எம்.பி. தலைமையில் வடக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா, கட்சியின் கிளிநொச்சி மாவட்டக்கிளைச் செயலாளர் வீரவாகு விஜயகுமார், முன்னாள் தவிசாளர்களான அருணாசலம் வேழமாலிகிதன், சுப்பிரமணியம் சுரேன் உள்ளிட்ட தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளை உறுப்பினர்களின் பங்கேற்போடு, இரண்டு சபைகளுக்குமான வேட்புமனுக்கள் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று நண்பகல் கையளிக்கப்பட்டது.
அதன்பின்னர் சிறீதரன் எம்.பி. ஊடகங்களிடம் கருத்துரைத்தார்.