பிரிவினைவாத புலம்பெயர்ந்தோர் முன்னர் எப்போதும் இல்லாத அளவிற்கு மிகவும் சுறுசுறுப்பாகவும், மூலோபாயரீதியாகவும், விடாமுயற்சியுடனும் உள்ளனர் என்பதை பிரிட்டனின் தடை அறிவிப்புகள் வெளிப்படுத்துவதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்
பிரிட்டன் இலங்கையின் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் கருணா அம்மானிற்கு எதிராக விதித்துள்ள தடைகள் குறித்த தனது சமூக ஊடக பதிவில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
ஐக்கிய இராச்சியம் எங்கள் யுத்தவெற்றிவீரர்களிற்கு எதிராக தடைகளை விதித்துள்ளது.
இந்த விடயங்கள் எவையும் வெற்றிடத்தில் நிகழவில்லை.பிரிவினைவாத புலம்பெயர்ந்தோர் முன்னர் எப்போதும் இல்லாத அளவிற்கு மிகவும் சுறுசுறுப்பாகவும், மூலோபாயரீதியாகவும், விடாமுயற்சியுடனும் உள்ளனர்.
எங்களின் அரசியல்வாதிகள் சுயவிருப்பத்துடனோ அல்லது அறியாமையினாலோ அல்லது திட்டமிட்டோ அவர்களின் கரங்களில் சிக்கிக்கொள்வது வருந்தத்தக்க விடயம்.
உலகின் மிகக்கொடுரமான பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றை தோற்கடித்து, பல தசாப்தங்களாக இரத்தக்களறியை எதிர்கொண்ட எமது தேசத்திற்கு அமைதியையும் ஸ்திரதன்மையையும், கொண்டுவருவதற்கு பொறுப்பானவர்களின் பாதுகாப்பையும் கண்ணியத்தையும் அரசியல் நோக்கத்திற்காக இலாபத்திற்காக ஆபத்தான முறையில் சமரசம் செய்துவருகின்றோம் என்பது எனக்கு உண்மையிலேயே கவலையளிக்கின்றது.
ஐக்கியம் சுதந்திரத்திற்காக செய்யப்பட்ட தியாகங்களை மறந்தால் அது எவ்வளவு தூரம் நன்றிகெட்ட தேசமாக இருக்கமுடியும்?
இலங்கை ஒரு ஒற்றையாட்சி நாடாகவே விளங்கவேண்டும்,இதில் எந்த விட்டுக்கொடுப்பிற்கும் இடமில்லை.
எங்கள் நாட்டின் இறைமை மற்றும் ஆள்புல ஒருமைப்பாட்டை பேணுவதற்கான எங்கள் அர்ப்பணிப்பு உறுதியானதாகயிருக்கவேண்டும்.
அனைத்து இலங்கையர்களும் இனமதமொழி பேதமின்றி கௌவரம் சமத்துவத்துடன் பரஸ்பர கௌரவத்துடன் வாழும் நாட்டை கட்டியெழுப்பும் அதேவேளை வெளிப்படையான அல்லது நயவஞ்சகமான அனைத்து வகையான பிரிவினை வாதத்தையும் எதிர்ப்பதற்கான எங்களின் கூட்டு தீர்மானத்தை நாங்கள் வலுப்படுத்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.