இது தொடர்பில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்துக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ள சிறீதரன் எம்.பி, இந்த விடயம் சார்ந்து அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“எதிர்வரும் செப்டெம்பரில் நடைபெறவுள்ள ஜெனிவா அமர்வுக்கு முன்னதாக, இனப்படுகொலையின் பங்குதாரர்களான நால்வர் மீது பிரித்தானிய அரசு விதித்துள்ள பயணத் தடை, காலம் தாழ்த்தியாவது தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை மீள அரும்பச் செய்திருக்கின்றது.
இலங்கையில், குறிப்பாக வடக்கு, கிழக்கு தமிழர்கள் மீது பேரினவாத அரசு வலிந்து நடத்திய போரின்போது மோசமான மனித உரிமை மீறல்கள், நீதிக்குப் புறம்பான கொலைகள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகளில் ஈடுபட்ட இந்த நான்கு பேர் மீதும் பிரித்தானிய அரசு விதித்திருக்கும் தடையையும், சொத்து முடக்க அறிவிப்பையும், சர்வதேச நீதிகோரும் பயணத்தில் தமக்கு கிடைத்திருக்கும் ஒரு சிறிய நம்பிக்கை ஒளிக்கீற்றாகவே ஈழத்தமிழர்கள் பார்க்கின்றார்கள்.
80 வருடங்களுக்கு மேலாக கேட்பாரற்று படுகொலை செய்யப்பட்ட தமிழ்த்தேசிய இனத்தின் எண்ணங்களுக்கும் இறந்துபோன ஆத்மாக்களுக்கும் இந்தத் தடை அறிவிப்பு தமக்கான நீதியின் கதவு திறக்கும் என்ற நம்பிக்கையைக் கொடுத்திருக்கின்றது.
காலனித்துவ ஆட்சி முடிவில், சுதேசிகளான தமிழர்களின் இறைமையை பிறிதோர் இனத்தவரிடம் ஒப்படைத்துச் சென்றமை வரலாற்றுத் தவறு என்பதை உலகம் இப்போதாவது உணரத்தலைப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.” – என்றுள்ளது.