இலங்கையில் போர்க் குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்டனர் என்று முன்னாள் இராணுவத் தளபதிகள் சிலருக்குப் பிரித்தானியா பயணத் தடை விதித்துள்ளதன் மூலம் இனப்படுகொலை ஒன்று இங்கு நடந்துள்ளதைப் பிரித்தானியா ஏற்றுக்கொண்டுள்ளது என்று வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா பழைய பஸ் நிலையப் பகுதிக்கு முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர்கள் மேற்கண்டவாறு கூறினார்கள்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கை அரசானது நீண்ட காலமாகப் பொறுப்புக்கூறலில் இருந்து தவறியுள்ளது. இதனால் நாம் சர்வதேச நீதி கோரி தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
இலங்கையில் போர்க் குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்டதாகச் சில இராணுவத் தளபதிகளுக்கு பிரித்தானியா பயணத் தடை விதித்துள்ளதன் மூலம் இனப்படுகொலை ஒன்று இங்கு நடந்துள்ளதை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பதை உணர முடியும்.
இவ்வாறு தடை விதிக்கப்பட வேண்டிய இன்னும் பல இராணுவத்தினர் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளும் உள்ளனர். அவர்கள் மீதும் இவ்வாறான தடைகளை விதிக்க வேண்டும். அனைத்துலக நாடுகளும் இந்தப் பயணத் தடைகளை விதித்து குற்றம் செய்தவர்களைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி சர்வதேச பொறிமுறையூடாக எமக்கான நீதியைப் பெற்றுத் தர வேண்டும். இதுவே எமது எதிர்பார்ப்பு.
இதேவேளை, 19 காணாமல்போன உறவுகள் உயிருடன் இருப்பதை தாம் கண்டுபிடித்துள்ளதாகக் காணாமல்போனவர்களுக்கான அலுவலகத்தினர் அண்மையில் கூறியுள்ளனர். அவர்கள் உண்மையில் காணாமல் ஆக்கப்பட்டோர் இல்லை. நாம் தந்த சாட்சியங்களில் ஒன்றைக் கூட அந்த அலுவலகத்தினர் கண்டுபிடிக்கவில்லை. மாறாக சர்வதேசத்துக்கு அப்பட்டமான பொய்களைச் சொல்கின்றனர். பொய்யான அறிக்கைகளை அவர்கள் வெளியிடுகின்றனர்.
எனவே, எமது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இந்தநிலையில் சர்வதேச நீதிப் பொறிமுறையூடாகவே எமக்கான நீதியை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.” – என்றனர்.