செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை உள்ளூராட்சித் தேர்தலில் சிங்களத் தேசியக் கட்சிகளை நிராகரிப்போம்! | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

உள்ளூராட்சித் தேர்தலில் சிங்களத் தேசியக் கட்சிகளை நிராகரிப்போம்! | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

3 minutes read

ஒரு சிங்கள தேசியக் கட்சி தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்வது தமிழ் மக்களுடைய அடிப்படையான அரசியல் உரிமைகளை பாதிக்கின்ற ஒரு விடயமாக அமையும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்

எதிர்வரும் மே மாதம் ஆறாம் நாள் நடைபெற உள்ள சிறிலங்காவின் உள்ளூராட்சி தேர்தல்கள் தொடர்பாக. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கருத்துக்களை பதிவுசெய்ய விரும்புகிறோம்.

நாம் முன்னரும் பல தடவைகள் சுட்டிக் காட்டியபடி தமிழ் மக்களின் சம்மதத்தை பெறாத சிறிவங்காவின் அரசியல் சட்டங்களை நாடுகடந்த தமிழீழ  அரசாங்கம் நிராகரித்து வருகிறது. இதன் அடிப்படையில். சிறிங்காவின் அரசியல் சட்டத்தின் கீழ் நடைபெறுகின்ற எந்த தேர்தல்களையும் கொள்கை நிலை நின்று நாம் ஏற்றுக் கொள்ளவோ அங்கீகரிக்கவோ இல்லை என்பதனை நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

இதேவேளை, தேர்தல்கள் மக்களின் பிரதிநிதித்துவத்தை வெளிப்படுத்தும் ஒரு கருவியாக அனைத்துலக அரங்கில் கருதப்படுவதால் தமிழ்த் தேசியக் கட்சிகள் தேர்தலில் பங்கு பற்றி வருகின்ற நிலைப்பாட்டை, உத்திசார்ந்த நிலையில்.நாம் புரிந்து கொள்கிறோம்.

இந்த நிலையில் நின்றே நடைபெற உள்ள உள்ளூராட்சி தேர்தல்கள் தொடர்பாக எமது கருத்துக்களை முன் வைக்கிறோம்.

தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளாக தமிழ் தேசம் என்ற நிலைப்பாட்டை, தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம், அவர்களுக்கு பாரம்பரிய தாயகம் உண்டு, அவர்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்ற நிலைப்பாட்டை கொண்ட அரசியல் கட்சிகளே தமிழர் பிரதிநிதித்துவத்தைப் பெறவேண்டும் என்பது எமது நிலைப்பாடாகும்.

சிங்கள தேசிய கட்சியான JVP சில அமைப்புகளுடன்  அணிசேர்ந்து NPP என்ற பெயரில் ஊழலுக்கு எதிராக அறைகூவல் விடுத்த ஒரு பின்னணியில் ஒரு தொகுதி தமிழ் மக்கள் அக்கட்சியினை ஆதரித்தமையினை நாம் கடந்த பாராளுமன்ற தேர்தலில் அவதானித்திருந்தோம் .ஒரு சிங்கள தேசியக் கட்சி தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்வது தமிழ் மக்களுடைய அடிப்படையான அரசியல் உரிமைகளை பாதிக்கின்ற ஒரு விடயமாக அமையும்.

இங்கு எந்த அரசியல் நிலைப்பாட்டில் இருந்து மக்கள் பிரதிநிதிகளாக வருகின்றார்கள் என்பது முக்கியமே அன்றி தமிழர்களாக இருப்பது மட்டும் அவர்கள் தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைகளை பிரதிநிதித்துவப்படுத்துபவர்ளாக அமைந்து விடுவதில்லை என்பது கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.

JVP யினைப் பொறுத்தவரையில் அவர்கள் நீண்ட காலமாக தமிழ் தேசத்துக்கு எதிரான ஒரு இனவாத நிலைப்பாட்டை எடுத்த கட்சி என்பதனை நாம் அறிவோம். சிறிலங்கா அரசின் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு போரை முன்னின்று நடத்திய கட்சிகளில் ஒன்றாக JVP  யினை நாம் பார்க்க வேண்டும். இணைந்திருந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரிக்க வேண்டும் என்ற ஒரு நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் முன்வைத்து செயல்பட்டது JVP என்பதை நாம் அறிவோம்.

இதேபோல், P-Toms  என்ற சுனாமி புனர்வாழ்வுக் கட்டமைப்பை சிறிலங்கா அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் இணைந்து உருவாக்கிய போது அதனையும் நீதிமன்றம் ஊடாக தடுத்து நிறுத்தியது JVP என்பதையும் நாம் அறிவோம். முள்ளிவாய்க்காலில் சிந்திய இரத்தத்தில்.இவர்களின் கரங்கள் உள்ளன என்பதையும் நாம் அறிவோம்.

இப்பொழுது JVP  வேறு NPP வேறு என்ற ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் ஒரு தேசம் என்றோ, இலங்கைத் தீவில் தேசிய இனப் பிரச்சனை என்று ஒன்று உண்டு என்பதோ இன்று வரை JVP யாலோ அல்லது NPP யாலோ ஏற்றுக்கொள்ளப்படவில்லை, அங்கீகரிக்கப்படவில்லை என்பதனை நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இங்கு JVP  யுடன் இணைந்து இருக்கின்ற ஏனைய சிறிய அமைப்புகள் JVP யின் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொண்ட, அமைப்புகளாக உள்ளன.இங்கு JVP என்கின்ற ஒரு மரத்தை சுற்றிப் படர்கின்ற  கொடிகளாகவே NPP யிலுள்ள ஏனைய அமைப்புகள் இருக்கின்றன என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த அடிப்படையில் JVP என்கின்ற அமைப்பு அது NPP என்ற முகத்தில் வந்தால் என்ன வேறு எந்த வடிவத்தில் வந்தாலென்ன தாம் தமிழ் மக்களுக்கு எதிராக எடுத்த இனவழிப்பு நிலைப்பாட்டுக்கு தமிழ் மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோருவதுடன் தமிழ் மக்களுடைய தேசிய இனப் பிரச்சினை சம்பந்தமான எத்தகைய நிலைப்பாட்டை அவர்கள் கொண்டு இருக்கிறார்கள் என்பதனை, வெளிப்படுத்தி.தமிழ் மக்களின் முன் அரசியல் செய்ய செய்வதே நன்மையானதாக  இருக்கும்.

ஆனால் அவற்றை உருமறைத்து ஊழலுக்கு எதிரான ஒரு அரசாங்கமாகவும். எல்லோரையும் சமத்துவமாக நடத்துகின்றவர்களாகவும் தாங்கள் இனவாதமற்றவர்களாகவும். இவர்கள் இப்பொழுது வெளிப்படுத்தி வருகின்றனர்.

இங்கு இனவாதம் என்கின்ற போது தனி மனிதர்களின் நிலைப்பாடு அரசியற்பார்வையில்  முக்கியமானதல்ல. அரசின் நிலைப்பாடே முக்கியமானது. இப்பொது ௳NPP தலைமை தாங்கும் சிறிலங்கா அரசு அடிப்படையில் ஒரு பேரினவாத அரசு என்பது NPP க்கும் தெரியும். சிறிலங்காவின் அரச முறைமை ஜனநாயகம் என்று கூறப்பட்டாலும் அது ஒரு இனநாயகமாக, பெரும்பான்மை இனத்தவருடைய முடிவுகளுக்கு மட்டும் இடம் கொடுக்கின்ற ஒன்றாக இருப்பதனை  அனைவரும் அறிவோம்.

இச்சூழலில், இலங்கைதீவில் தமிழ் மக்களுடைய இறைமை மீட்கப்படுவதும், தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைகள் வென்றெடுக்கப் படுவதும், தமிழ் மக்களுடைய தொடர்ச்சியான போராட்டத்தினால் தான் சாத்தியமாகும். இதனால், ஊழல் ஒழிப்பு என்றோ சமத்துவம் என்றோ முகம் காட்டி தமது உண்மை முகத்தை மறைத்து நிற்கும் NPPக்கு ஆதரவு வழங்குவீர்கள் என்றால் வரலாற்றுத் தவறு இழைத்தவர்களாக எதிர்கால தலைமுறை எங்கள் மீது குற்றம் சுமத்துகின்ற ஒரு சூழல் உருவாகும் என்பதனை எச்சரிக்கையுடன் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

NPP க்கு மட்டுமல்ல எந்த சிங்கள தேசிய கட்சிகளுக்கும் தமிழ் மக்கள் தங்கள் ஆதரவை வழங்காமல் இருத்தல் தமிழ் மக்களுடைய உரிமை சார்ந்த நிலைப்பாட்டிலிருந்து முக்கியமானது என்று நாங்கள் கருதுகிறோம்.

மேலும், தமிழ்த்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகள் தமக்குள்  ஒரு உடன்பாட்டை ஏற்படுத்திக்கொள்ளாது பிரிந்து நின்று  தேர்தல்களை அணுகும் ஒரு நிலை மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் விளைவாக மக்கள் பிரதிநிதித்துவம் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளை விட  ஏனைய கட்சிகளுக்கும் போகின்ற ஒரு சூழல் உருவாகி இருக்கின்றது என்பதனையும் நாம் கவலையுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

இந் நிலையை தமிழ்த்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகள் கவனத்தில் கொண்டு இது குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ளல் அவசியம் என்றும் நாம் வலியுறுத்துகிறோம்.

இதுவரை காலமும் தனித்து்நின்று தேர்தல்களை எதிர் கொண்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி  இத் தடவை கூட்டாகத் தேர்தலை எதிர்கொள்வதை நாம் வரவேற்கிறோம். தமிழர் தேசத்தை வலுப்படுத்தக்கூடிய ஓர் கூட்டமைப்பாக இவ் அணி வளர வேண்டும் என்பதுவும் எமது விருப்பாகும். என்றுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More