இவ் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 17,000க்கும் மேற்பட்டோர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர் விஷேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
டெங்கு நோயால் மேல் மாகாணம் தொடர்ந்து அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 46 சதவீதமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு 17,459 டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, அவர்களில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
ஏப்ரல் மாதத்தில் மட்டும் மொத்தம் 5,018 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 985 பேர் இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் பொதுமக்கள் 24 மணி நேரமும் மருத்துவ உதவியை நாட முடியும். கர்ப்பிணித் தாய்மார்களுக்கு காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் தென்பட்டால் 24 மணி நேரத்திற்குள் வைத்தியரை நாட வேண்டும்.
டெங்கு, சிக்குன்குன்யா போன்ற நோய்கள் பரவுவதைத் தடுக்கவும், சமூக சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யவும் நுளம்புகள் பெருகும் இடங்களை சுத்தம் செய்யுமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்துகின்றனர்.