“எமது மக்கள் அலையைக் கண்டு எதிர்வரும் ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதமளவில் ஜனாதிபதியாக நினைப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்று எண்ணத் தோன்றுகின்றது. ஆகவே, ஜனாதிபதியாக வேண்டும் என்ற சிந்தனையில் உள்ளவர்கள் அந்தச் சிந்தனையைத் திருத்தம் செய்துகொள்ள வேண்டும்.”
– இவ்வாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் கொழும்பு – காலிமுகத்திடலில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
“காலிமுகத்திடல் இம்முறை மே தினக் கூட்டத்தால் பெருமையடைந்துள்ளது.
2025ஆம் ஆண்டு ஆட்சி அதிகாரத்துடன் மே தினக் கூட்டத்தை நடத்துவோம் என்று கடந்த முறை மக்களுக்கு வாக்குறுதி அளித்தோம். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம்.
ஏனைய அரசியல் கட்சிகளின் மே தினக் கூட்டத்துக்கும் எமது மே தினக் கூட்டத்துக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றது. பாரிய போராட்டத்துக்கு மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றினோம். போராட்டத்தைக் கொண்டாடும் வகையில் இம்முறை மே தினக் கூட்டம் அமைந்துள்ளது.
எமது மக்கள் அலையைக் கண்டு எதிர்வரும் ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதமளவில் ஜனாதிபதியாக நினைப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்று எண்ணத் தோன்றுகின்றது. ஆகவே, ஜனாதிபதியாக வேண்டும் என்ற சிந்தனையில் உள்ளவர்கள் அந்தச் சிந்தனையைத் திருத்தம் செய்துகொள்ள வேண்டும்.
உழைக்கும் வர்க்கத்தினர் எமது வெற்றியின் பிரதான பங்காளர்கள் என்பதை ஒருபோதும் மறக்கப் போவதில்லை. மக்கள் எமக்கு வழங்கிய ஆணைக்கு அமைவாகவே செயற்படுவோம். எதிர்காலம் குறித்து அரசிடம் பாரிய திட்டங்கள் உள்ளன. சிறந்த நாட்டையே நாங்கள் எதிர்கால தலைமுறையினரிடம் ஒப்படைப்போம்.” – என்றார்.