தனி மனித தீர்மானம் எடுக்கும் கட்சியாக நாங்கள் இல்லை. தலைவர் என்ற முறையில் நாம் இதனை தெளிவாகச் சொல்கிறேன். முன்பு அவ்வாறான நிலைமை இருந்திருக்கலாம். ஆனால் தற்போது அவ்வாறில்லை. ஆகக் குறைந்தது தலைவர், செயலாளராவது கலந்து பேசி எல்லா விடயங்களையும் இணைந்து தான் செயற்படுகிறோம். ஆகவே, தனி மனித தீர்மானம் என்ற பேச்சு அபாண்டமானது என அக்கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (9) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
வடக்கு, கிழக்கு பெரும்பான்மையான சபைகளை கைப்பற்றி ஆளும் வகையில் முதல் நிலையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி இருக்கிறது. அவ்வாறு எமக்கு வாக்களித்து எம்மை அங்கீகரித்து ஏற்றுக்கொண்ட, எமக்கு ஊக்கமளித்த, தமிழ்த் தேசியத்தை நேசிக்கின்ற அனைவருக்கும் வடக்கு, கிழக்கு வாழும் மக்கள் எல்லோருக்கும் கட்சி சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
குறிப்பாக யாழ்ப்பாணத்தில் மீண்டெழுவதற்கான வாய்ப்பைத் தந்த வாக்காளர் பெருமக்களுக்கு நன்றி கூறுகின்றோம்.
மிகக் கேவலமாக தேர்தல் காலத்தில் எங்களை எதிர்த்துப் போட்டியிட்டு இல்லாதவற்றை சொல்லி தங்களின் மகிழ்ச்சியை கொண்டாடியவர்கள் இப்பொழுது நாங்கள் தேசிய மக்கள் கட்சியோடு டீல் பேசுகிறோம் என்று பொறுப்புள்ளவர்களே குறிப்பிட்டு பேசுகிறார்கள்.
தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் என்ற முறையில் பொறுப்போடு இதனை மறுதலிக்கிறேன்.
எந்த சந்தர்ப்பத்திலும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி தேசிய மக்கள் சக்தியோடு இணைந்து ஆட்சி அமைப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. எந்த டீலையும் செய்யவில்லை. இந்த பரப்புரைகள் வேலை செய்யாது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
தேசிய மக்கள் சக்தியின் முக்கிய பிரமுகர் நளிந்த ஜயதிஸ்ஸ கூட தம்மை தமிழ் கட்சிகள் அணுகவில்லை என்பதை கூறியிருக்கிறார்.
அடுத்த கட்ட செயற்பாடுகளை ஆராய்வதற்காக நாளைய தினம் சனிக்கிழமை அரசியல் குழு கூடி, இவ்வாறான தேர்தல் விடயங்களை எந்தெந்த சபைகளில், எவ்வாறு செயற்படுவது, யார் யாரை முன்னிலைப்படுத்தி தவிசாளர் முதல்வரை தீர்மானிப்பது என்பது தொடர்பாக கலந்துரையாடவுள்ளோம்.
ரெலோ, புளோட் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் எங்கள் கட்சியின் பொதுச்செயலாளருடன் பேசியுள்ளார்கள். செல்வம் அடைக்கலநாதன் தாம் தமிழ் தேசிய கூட்டமைப்பாக செயற்பட விருப்பம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் உட்பட தமிழ் தேசிய கூட்டமைப்பாக செயற்பட்ட கட்சிகளாக நாம் மீண்டும் செயற்பட கோரிக்கை விடுக்கிறோம் என்றார்.