போதைப்பொருள் மற்றும் பாதாள குழுக்களின் செயற்பாடுகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புப்பட்டுள்ளது. 2024.09.21 முதல் 2025.05.07 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற 79 துப்பாக்கிச் சூட்டு பிரயோகத்தில் 52 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (9) நடைபெற்ற அமர்வின்போது சமூக கட்டமைப்பில் நாளாந்தம் இடம்பெறும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் மற்றும் உயிரிழப்புக்கள் குறித்து எதிர்க்கட்சியின் உறுப்பினர் தயாசிறி ஜயசேகர முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்;
பாதாளக் குழுக்களின் செயற்பாடு மற்றும் அவர்களை உருவாக்கியவர்கள், போசித்தவர்கள் குறித்து அனைவரும் நன்கு அறிவார்கள். பாதாளக் குழுக்களின் செயற்பாட்டை இல்லாதொழிப்பதற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
போதைப்பொருள் மற்றும் பாதாள குழுக்களின் செயற்பாடுகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புப்பட்டுள்ளது. 2024.09.21 முதல் 2025.05.07 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற 79 துப்பாக்கிப் பிரயோகத்தில் 52 பேர் உயிரிழந்துள்ளனர். திட்டமிட்ட பாதாள குழுக்களுடன் தொடர்புடைய 260 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டபவர்கள் மற்றும் கைது செய்யப்படாதவர்களின் விபரங்களை வெளியிட முடியாது.
போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் பாதாள குழுக்களுக்கு இடையிலான முரண்பாடுகளின் வெளிப்பாடாகவே துப்பாக்கிசூட்டு பிரயோகம் காணப்படுகிறது. இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்வாதாரத்துக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.ஏனெனில் கடந்த காலங்களில் இதனை காட்டிலும் பல படுகொலைகள் இடம்பெற்றன.
இராணுவத்தில் இருந்து இடைவிலகியவர்கள் பாதாள குழுக்களுடன் தொடர்புக் கொண்டு ள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இது குறித்து முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பாதாளக்குழுக்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரம் ஆகியவற்றுக்கு அரசியல் தொடர்பு உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி,: சர்வஜன சக்தி, உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் 34 பேர் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் அதனுடான குற்றச்செயல்களுடன் தொடர்புக்கொண்டுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவர்கள் நடந்து முடிந்த உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட்டுள்ளார்கள்.
போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பாதாள குழுக்களை கட்டுப்படுத்துவதற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். புதிய சட்டங்கள் வெகுவிரைவில் இயற்றப்படும் புதிய விசாரணை அலகுகள் அனைத்து மாவட்டங்களிலும் நிறுவப்படும். பாதாளக் குழுக்களின் செயற்பாடுகளினால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்றார்.