“உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றுக்கொண்ட சபைகளில் கூட்டணி அமைத்து ஆட்சியமைப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாரில்லை. அவ்வாறான சபைகளில் மக்களின் தீர்மானத்துக்கமைய செயற்படுவோம்.”
– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்கும் கூட்டணி தொடர்பில் கட்சியின் நிலைப்பாட்டை ஊடகங்களிடம் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ள சபைகளில், எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியமைப்பதற்கான பேச்சுவார்த்தை கடந்த புதன்கிழமை இடம்பெற்றது.
அதில் எமது கட்சி சார்பில் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ் கலந்துகொண்டு, எமது கட்சியின் நிலைப்பாட்டை அங்கு தெரிவித்திருந்தார்.
அதன் பிரகாரம் அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, குறித்த அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடனான சந்திப்பொன்று நடத்த ஏற்பாடு செய்திருந்தது.
அந்தக் கலந்துரையாடலில் நாங்கள் கலந்துகொள்ளவில்லை. ஏனெனில் கூட்டணி அமைத்து உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்கத் தேவையில்லை என்ற நிலைப்பாட்டிலே நாங்கள் இருக்கின்றோம்.
கட்சி என்ற வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினராகிய எங்களுக்கு என்று ஒரு கொள்கை ஒன்று இருக்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி என்பது வேறு கொள்கைகளையுடைய கட்சிகள்.
அதனால் ஆட்சியமைப்பதற்கு மாத்திரம் எங்களுக்கு மத்தியில் கூட்டணி அமைக்கத் தேவைப்பாடாது. அவ்வாறன நிலைக்குத் தள்ளப்பட கட்சி என்ற வகையில் நாங்கள் தயாரில்லை.
அதனால் உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்கும்போது, அந்த உள்ளூராட்சி சபைகளில் மக்களின் நிலைப்பாட்டை அறிந்து, தீர்மானம் மேற்கொள்வோம். மாறாகக் கட்சியாகக் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க நாங்கள் இணக்கம் இல்லை.” – என்றார்.