இலங்கையின் அனைத்து மக்களும் இறந்துபோன தம் அனைத்து உறவுகளையும் ஒன்றாக ஒரே நேரத்தில் இலங்கையர்களாக நினைவுகூரும் ஓர் எதிர்காலத்தை நோக்கி நம் நாடு பயணிக்க வேண்டும். தெற்கில், வடக்கில் நிகழ்ந்த அரச மற்றும் அரச சார்பற்ற பயங்கரவாத நிகழ்வுகளுக்கு எதிரான வெற்றிக் கொண்டாட்டங்களையும் கூட கொண்டாடலாம். ஆனால், இந்த இலக்கை அடைய இலங்கை, முப்பது வருட யுத்தம் நிகழ்ந்தமைக்கான மூல காரணங்களை தேடியறிந்து அவற்றுக்குத் தீர்வு தேட வேண்டும். மகிந்த ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க, அனுர குமார திசாநாயக்க, சஜித் பிரேமதாச என எவராக இருந்தாலும், தீர்வுகள் தேடாவிட்டால், நாம் நின்ற அதே இடத்திலேயே நிற்போம். இதுதான் உண்மை என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் மனோ கணேசன் விசேட பதிவொன்றை இட்டுள்ளார். அதில் தெரிவித்துள்ளதாவது:
இலங்கை சமூகத்தில் மரணித்துப்போன உறவுகள், இன்று முள்ளிவாய்க்காலிலும் தெற்கிலும் நினைவுகூரப்படுகிறார்கள். தெற்கில் இராணுவ வெற்றி விழா நடத்தப்படுகிறது.
நினைவுகூரலும் வெற்றி விழாவும் ஒருசேர நடத்தலாம். அந்த நாள் வர வேண்டும். ஆனால், அந்த இலக்கை, முப்பது வருட காலம் யுத்தம் நிகழ்ந்தமைகான மூல காரணங்களை தேடி அறிந்து அவற்றுக்குத் தீர்வு தேடாமல் அடைய முடியாது.
1948ஆம் ஆண்டு குடியுரிமை – வாக்குரிமை பறிப்புச் சட்டங்கள், சிங்களம் மட்டும் சட்டம், பண்டா-செல்வா மற்றும் டட்லி-செல்வா ஒப்பந்தங்கள் மற்றும் சந்திரிக்காவின் 2000ஆம் ஆண்டு தீர்வுத் திட்டம் ஆகியவை அகெளரவமான முறைகளில் உதாசீனப்படுத்தப்பட்டமை, 13ஆம் திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்படாமை, பல இனங்கள், மதங்கள், மொழிகள் கொண்ட இலங்கையின் பன்முகத்தன்மை அங்கீகரிக்கப்படாமை, கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவின் (LLRC) சிபாரிசுகள் அமுல்படுத்தப்படாமை, யுத்தத்தின் பின் மகிந்த-பான்கி-மூன் வெளியிட்ட கூட்டறிக்கை அலட்சியப்படுத்தப்பட்டமை ஆகிய தவறுகளை திருத்தி முன் நகர முடியாவிட்டால் எமது நாட்டின் தேசிய பயணம் நின்ற அதே இடத்திலேயே நிற்கும் என குறிப்பிட்டுள்ளார்.