செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மாற்றத்துக்காக வாக்களித்தாலும் இதுவரை எமது வாழ்வில் மாற்றமில்லை

மாற்றத்துக்காக வாக்களித்தாலும் இதுவரை எமது வாழ்வில் மாற்றமில்லை

1 minutes read

நாங்கள் மாற்றத்துக்காக வாக்களித்தாலும் இதுவரையில் எங்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படவில்லை எனவும் இந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் எங்களுக்கான மாற்றம் ஏற்படும் என நம்புவதாகவும் வீதி அபிவிருத்தி அதிகார சபையில் தற்காலிக ஊழியர்களாக கடமையாற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்த ஊழியர்கள் தெரிவித்தனர்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையில் தற்காலிக ஊழியர்களாக கடமையாற்றும் ஊழியர்கள் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையில் கடமையாற்றும் அனைத்து தற்காலிக ஊழியர்களையும் நிரந்தரமாக்கக் கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஐக்கிய பொது சேவையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் உள்ள, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுத்தூபி முன்பாக நடத்தப்பட்டது.

இந்த போராட்டத்தில் ஐக்கிய பொது சேவையாளர் சங்கத்தின் தலைவி சட்டத்தரணி அ.சுவஸ்திகா, சங்கத்தின் செயலாளர், ஊழியர்கள், தற்காலிகமாக கடமையாற்றும் ஊழியர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையில் தற்காலிக ஊழியர்களாக உள்ளவர்களை நிரந்தரமாக்கவேண்டும், மருத்துவ விடுமுறைகளை 14 நாட்களாக அதிகரிக்க வேண்டும் என்பவற்றை வலியுறுத்தியே இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபையில் தற்காலிக ஊழியர்களாக 140 பேர் உள்ளதுடன் இலங்கை முழுவதும் 1039 நிரந்தரமற்ற தொழிலாளர்கள் காணப்படுவதாகவும் இவர்கள் அனைவரும் நிரந்தரமாக்கப்படவேண்டும் எனவும் இங்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

கடும் வெயில் நேரங்களிலும் கடுமையான மழை நேரங்களிலும் நேரம் காலம் பார்க்காமல் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஊழியர்கள் கடமையாற்றிவரும் நிலையில் ஏனைய ஊழியர்கள் அனுபவிக்கும் உரிமைகளை தாங்கள் அனுபவிக்கமுடியாத நிலையே காணப்படுவதாகவும் இங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கவலை தெரிவித்தனர்.

ஆட்சிமாற்றம் ஏற்பட்டால் தமக்கு விடிவுகாலம் ஏற்படும் என்ற நோக்கிலேயே தாங்கள் வாக்களித்தபோதிலும் இதுவரையில் தங்களுக்கு எந்த விடிவும் கிடைக்கவில்லை எனவும் இந்த ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தில் தமக்கான விடிவு கிடைக்கும் என நம்புவதாகவும் இதன்போது தெரிவித்தனர்.

அரசாங்கம் தமது கோரிக்கைகளை செவிமடுக்காமல் விடுமானால் அடுத்த மாதம் கொழும்பில் கூட பெரும் போராட்டத்தினை நடத்த தயாராகிவருவதாகவும் இதன்போது தெரிவித்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More