இந்திய விமானப் படைக்கு 48 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 83 தேஜஸ் இலகு ரக விமானங்களை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் முன்னிலையில் கையெழுத்தாகவுள்ளது.
பெங்களூருவில் இன்று (புதன்கிழமை) சர்வதேச விமானக் கண்காட்சி ஆரம்பமாகிறது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்தக் கண்காட்சியைத் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
3 நாட்கள் நடக்கும் இந்த விமானக் கண்காட்சியில் உலகளாவிய விமான நிறுவனங்களான போயிங், லாக்ஹீட் மார்டின், டசால்ட் மற்றும் ஏர்பஸ் தவிர, இந்த நிகழ்ச்சியில் தலேஸ், பிஏ, சிஸ்டம்ஸ் மற்றும் ஏவுகணை தயாரிப்பு நிறுவனமான MBDA நிறுவனமும் பங்கேற்றுள்ளன.
இந்நிலையில், இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து 83 விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது. இந்த விமானங்கள் 2024ம் ஆண்டு முதல் வழங்கப்படும் என இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தின் தலைவர் மாதவன் கூறியுள்ளார்.
விமானப்படைக்கு 73 எம்கே 1 ஏ ரக தேஜஸ் போர் விமானங்களும் 10 எல்சிஏ தேஜஸ் எம்கே 1 ரக விமானங்களையும் கொள்வனவு செய்ய மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.