இந்தியா யாருக்கும் சளைத்ததல்ல என்றும் தேஜஸ் மார்க்-2 இலகு ரக போர் விமானத்தை உருவாக்கப் போவதால் புதிய வரலாற்றை எச்.ஏ.எல். நிறுவனம் படைக்கப் போகிறது எனவும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
பெங்ளூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “தேஜஸ் மார்க்-2 இலகு ரக போர் விமானத்தை உருவாக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது சுயசார்பு இந்தியாவை அடைவதற்கான முதல்கட்டப் பணியாகும். போர் தளவாடங்களில் நாம் வெளிநாட்டைச் சார்ந்திருக்க முடியாது. இதனால் இந்தியா யாருக்கும் சளைத்ததல்ல என்பதை உலகத்துக்கே புரிய வைத்துள்ளோம்.
தேஜஸ் மார்க்-2 இலகு ரக போர் விமானத்தை உருவாக்குவதால் புதிய வரலாற்றை எச்.ஏ.எல். நிறுவனம் படைக்கப் போகிறது. இதனால் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது. இதைத் தொடக்கி வைப்பதில் பெருமை அடைகிறேன்.
சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்திய தேஜஸ் மார்க்-2 போர் விமானத்தின் விலையை வெளிநாட்டுப் போர் விமானங்களின் விலையுடன் ஒப்பிடுகையில் விலை மிகவும் குறைவானது” எனக் குறிப்பிட்டுள்ளார்.