விடுதலைப்புலிகளுடனான இறுதிப்போரில் ராணுவத்தினர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க ஐ.நா. அமைத்துள்ள குழுவை இலங்கைக்குள் அனுமதிக்கக் கூடாது என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கை அதிபர் ராஜபட்ச தலைமையிலான ஆளும்கட்சி சார்பில் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட இந்தத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு புதன்கிழமை நடைபெற்றது. தீர்மானத்துக்கு ஆதரவாக 144 எம்.பி.க்களும், எதிராக 10 பேரும் வாக்களித்தனர். 37 எம்.பி.க்கள் புறக்கணித்தனர்.
இந்தத் தீர்மானத்தில், “இலங்கையின் இறையாண்மைக்கும் கெளரவத்துக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் இந்த விசாரணையை ஐ.நா. சபையின் மனித உரிமைகள் அமைப்பு நடத்த முற்படுகிறது. இந்த விசாரணை நடைபெற்றால் நாட்டில் மேற்கொள்ளப்படும் அமைதி முயற்சிகள் மற்றும் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகள் பாதிக்கப்படும். எனவே நாட்டின் நலனுக்கு எதிரான இந்த விசாரணையை அனுமதிக்க முடியாது’ என்று குறிப்பிடப்
பட்டிருந்தது.
முன்னதாக, ராஜபட்ச அரசில் அங்கம் வகித்துவரும் முக்கிய கூட்டணிக் கட்சியான இலங்கை முஸ்லிம்கள் காங்கிரஸ் இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளப்போவதில்லை என அறிவித்தது.
இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவரும் அந்நாட்டு நீதித்துறை அமைச்சருமான ரவூஃப் ஹக்கீம் வெளியிட்ட அறிக்கையில், இலங்கையின் தென்மேற்கு பகுதியில் புத்த மதத்தினர் நடத்திவரும் இனவெறித் தாக்குதல்களில் இருந்து முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்கு ராஜபட்சவின் அரசு தவறிவிட்டது. இந்த வன்முறையைத் தடுப்பதற்கு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை
என்றார்.