இந்த ஆண்டிற்கான சிறந்த சுற்றுலாத்தலங்களின் தரவரிசை சமீபத்தில் மாஸ்டர்கார்ட் உலக நகரங்கள் இன்டெக்சில் வெளியிடப்பட்டது. நான்காவது ஆண்டு வெளியிடப்பட்ட இந்த தரவரிசையில், உலகம் முழுவதிலும் சுற்றிப்பார்ப்பதற்குத் தகுந்தவையாக 132 இடங்களை இந்நிறுவனம் பட்டியலிட்டுள்ளது.
அதில் கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த பாங்காக்கைப் பின்னுக்குத் தள்ளி இங்கிலாந்தின் லண்டன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்த ஆண்டு லண்டனுக்கு வரக்கூடிய பார்வையாளர்களின் திட்டமிடப்பட்டுள்ள எண்ணிக்கையான 18.7 மில்லியன் என்பது கடந்த வருடம் முதலிடத்தில் இருந்த பாங்காக்கிற்கு வந்தவர்களைவிட 3,00,000 அதிகமாகும். 16.4 மில்லியன் பார்வையாளர்களுடன் பாங்காக் இந்த வருடம் இரண்டாவது இடத்தையும், பாரிஸ் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
முதல் 20 இடங்களில் ஐரோப்பாவின் லண்டன், பாரிஸ், இஸ்தான்புல்(7), பார்சிலோனா(11), ஆம்ஸ்டர்டாம்(12), மிலன்(13), ரோம்(14), வியன்னா(17) என்ற எட்டு நகரங்கள் இடம் பெற்றுள்ளன. பாங்காக், சிங்கப்பூர், துபாய் ஆகியவை முதல் ஐந்து இடத்திற்குள் உள்ளன. முதலிடம் பெற்றுள்ள லண்டன் நகர மேயர் போரிஸ் ஜான்சன் இதுபற்றிக் குறிப்பிடும்போது வரலாறு, பாரம்பரியம், கலை, பாரம்பரியம் என அனைத்து நிகழ்வுகளையும் லண்டன் ஒருங்கிணைக்கின்றது. அதுமட்டுமின்றி இங்குள்ள பச்சைப் புல்வெளிகளும், முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளும் அனைவரும் பொறாமைப் படக்கூடிய வகையில் அமைந்துள்ளன என்றார்.
சர்வதேச நகரங்களுக்கு இந்த ஆண்டு கிடைத்துள்ள அங்கீகாரம் வர்த்தக, கலாச்சார மற்றும் பொருளாதார மையங்களாக இந்த நகரங்களின் முக்கியத்துவம் தொடர்வதையே காட்டுகின்றது என்று மாஸ்டர்கார்டின் சர்வதேச சந்தைகளுக்கான தலைவர் ஆன் கெய்ர்ன்ஸ் தெரிவித்தார்.