விரல்கள் தோற்றுப் போகும்
ஒரு நாளின்
மணித்தியாலங்களைக்
கணக்கிட முடியாக்
கணத்தில்
கை விரல்களின் குறைவு
முகமறையும்
புத்தி –
கால் விரல்களைச்
சேர்த்தெண்ணிப்
பின்னும்
தோற்றுப் போகும் . . .
எஞ்சிக் கிடக்கும்
நான்கு மணி நேரங்கள்.
ஒரு நாளை
வெல்லவே முடியாது . . .
விரல்களால் . . .
கைகளால் . . .
கால்களால்.. .. ..
மட்டுமா?
வயிற்றால் – வெறும்
வயிற்றால் . . . .
எனதும் . . .
குழந்தையினதும்
வயிற்றால்?
எம்
நாட்கள் வெல்லப்
படாமலே போயிற்று –
மெல்ல வயிற்றில்
பரவும் வலி – தேக
மெங்குமோடி பின்
மூளை வரும் . . .
குழந்தையோ . . .
பெருங்குரலில் ஆரம்பித்தழுதுப்
– பின்
அனுங்கும் . . .
வாய் சப்பும் . . . .
தசையின்றிப் – பால்
வற்றித் துருத்திக்
கிடக்கும் – முளைக் காம்பை
அவள் வாய்க்குள்
திணித்துத் தோற்றுப்
போவேன் – நான்
உடல் சிதறிக் கிடந்த
இருபது பேரின் நடுவே
என்னவனைத் தேடித்
தோற்றுப் போன
நாள் முதல் . . .
பெயரறியா இடம்
நோக்கிப் பெயர்ந்ததும்.
பசி பழகிப் பல நாட்கள்
பட்டினியாய்
கிடந்ததும் . . .
மீட்போரைத் தாண்டி
முட்வேலிக்கம்பிக்குள் . . .
அவள் பிறந்ததும்
மீள . . . இரு வருடம்
தாண்டி ஊர் திரும்பி
உடைந்தழிந்த
என் வீட்டின்
எச்சங்களில்
பச்சை ஓலைக்
கூரையிட்டு
படுத்த போது . . .
பசி
ஓங்கியறையுது . . .
ஓலமிடுகுது . .
இரவொன்றில்
மரத்துப் போன மனத்துடனும்,
பசித்துப் போன வயிற்றுடனும்
பற்றையொன்றிலொதுங்கிச் –
சில
பணத்தாள்கள் பார்த்த பின் –
தான்
பசியடங்கிப் போயிற்று –
உனக்கும் , எனக்கும் . . . அவனுக்கும் கூட
இச் சமூகத்தின் அகராதியில்
எனைக் குறிக்கும் பெயர்
என்ன? . . . வேசையா? . . .
வைத்துக் கொள்
பறவாயில்லை
பசித்தழாது . . . என்
குழந்தையாவது
இருக்கட்டும் . .
–மாயன் –