டெல்லி: நாடு முழுவதும் சரவெடிக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்தாண்டு தீபாவளி பண்டிகை வரும் 4ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற முந்தைய உத்தரவை மாற்றி, காலையில் 4 மணி நேரமும், மாலையில் 4 மணி நேரமும் பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும் என கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக பட்டாசு உற்பத்தியாளர்கள சங்கம் வழக்கு தொடர்ந்துள்ளது. இதை விசாரித்த நீதிமன்றம், தடை செய்யப்பட்ட பேரியம், நைட்ரேட் ரசாயனங்கள் அடங்கிய பட்டாசுகளை பயன்படுத்தக் கூடாது.
பட்டாசு தயாரிக்க உச்ச நீதிமன்றம் விதித்த விதிமுறைகளை பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு இருப்பதாக கண்டனமும் தெரிவித்தது. இந்நிலையில், நீதிபதி எம்.ஆர்.ஷா அமர்வில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பசுமை பட்டாசு தயாரிப்பில் எந்த விதிமீறலும் நடைபெறவில்லை என பட்டாசு உற்பத்தியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “பண்டிகை, திருவிழா, நிகழ்ச்சியில் உற்சாகத்துக்காகவும், தனி நபரின் மகிழ்ச்சிக்காகவும் விதிமுறைகளை மீறி தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் வெடிக்கப்படுகிறது.
இதில் பிறரின் உடல் நலம் பாதிப்பைதையும், உயிர் பறிக்கப்படுவதையும் பட்டாசு தயாரிப்பாளர்கள் கருத்தில் கொள்வது கிடையாது. இத்தகைய செயல்பாட்டை எப்படி அனுமதிக்க முடியும்? ஒருவரின் நல்வாழ்வு என்பது அவரின் அடிப்படை உரிமை. அதனால், மகிழ்ச்சிக்காகவும், உற்சாகத்துக்காகவும் பட்டாசுகளை வெடித்து சுற்றுச்சூழலை பாதிக்க செய்யக் கூடாது,’ என தெரிவித்தனர். தொடர்ந்து வழக்கு விசாரணையை இன்றைய ஒத்திவைத்தனர். இந்நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, நாடு முழுவதும் சரவெடிக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
பட்டாசு விற்பனை மற்றும் தயாரிப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. ஒட்டுமொத்தமாக அனைத்து வகை பட்டாசுகளுக்கும் தடை விதிக்கவில்லை. தடை செய்யப்பட வேதிப்பொருட்களை பயன்படுத்தி பட்டாசு தயாரிக்கவோ, விற்கவோ கூடாது. தடை செய்யப்பட வேதிப்பொருட்களை பயன்படுத்தி பட்டாசு தயாரிப்போர், விற்போரின் உரிமம் ரத்து செய்யப்படும். பேரியம் உப்பை பயன்படுத்தி தயாரிக்கப்படும் பட்டாசுகளுக்கு அனுமதி இல்லை. உச்சநீதிமன்றம் விதித்த தடையை காவல்துறை உள்ளிட்ட அமைப்புகள் அமல்படுத்த தவறுவதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
எங்காவது தடை செய்யப்பட பட்டாசு வெடிக்கப்பட்டால் அந்த மாநில தலைமை, உள்துறை செயலர், காவல் அதிகாரியே பொறுப்பு. தடை மீறப்பட்டால் அந்தந்த பகுதி காவல் ஆய்வாளர்களும், அதிகாரிகளும் தனிப்பட்ட முடியில் பொறுப்பாக்கப்படுவார்கள். கொண்டாட்டம் என்ற பெயரில் அடுத்தவரின் நலனுக்கு கேடு விளைவிக்கும் வகையில் நடக்க கூடாது. யாருடைய உயிருக்கும் குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள், உயிருடன் விளையாட யாரையும் அனுமதிக்க முடியாது. உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் பட்டாசுகளுக்கு மட்டுமே தடை விதித்துள்ளதாகவும் உச்சநீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. தடை செய்யப்பட பட்டாசுகளை வெடிக்கக்கூடாது என்பதை அரசு விளம்பரப்படுத்தவும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.