சிறுபான்மையின மக்களை ஒடுக்கிவந்த பாகிஸ்தானில் இருந்து பிரிந்து வங்காளதேசம் என்ற தனிநாடு உதயமாவதற்காக 1971-ம் ஆண்டு வங்காளதேசத்தில் உச்சகட்ட உள்நாட்டுப் போர் நடைபெற்றது.
இந்த விடுதலைப் போராட்டத்தை மழுங்கடிப்பதற்காக போர்க் குற்றங்களில் ஈடுபட்ட ஜமாத் இ இஸ்லாமி கட்சி தலைவர் மட்டியுர் ரஹ்மான் நிஜாமி என்பவருக்கு வங்காளதேச உச்ச நீதிமன்ற தீர்ப்பாயம் கடந்த வாரம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இதே குற்றச்சாட்டின்கீழ், வங்காளதேசத்தைச் சேர்ந்த பிரபல பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி சேனலின் உரிமையாளரான மிர் குவாஸிம் அலி என்பவர் மீதும் போர்க்குற்ற வழக்கு நடைபெற்று வந்தது.
1971-ம் ஆண்டுவாக்கில் சுதந்திரப் போராட்டக்காரர்களின் வீரியத்தை குறைப்பதற்காக ஒரு ஓட்டலின் அறையில் சித்ரவதை முகாம் ஒன்றை நடத்தி, பலரை கொன்று குவித்ததாக மிர் குவாஸிம் அலி மீது குற்றம்சாட்டப்பட்டது. இவ்வழக்கு விசாரணையின்போது அவருக்கு எதிராக சாட்சி கூறியவர்களில் பெரும்பாலானவர்கள் இந்த சித்ரவதை முகாமில் இருந்து தப்பியோடி உயிர் பிழைத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 43 ஆண்டு காலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணையில் ஆள் கடத்தல், சித்ரவதை, கொலை போன்ற மிர் குவாஸிம் அலி(62) மீதான போர்க் குற்றங்கள் சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப்பட்டதால் அவரது உயிர் பிரியும் வரை தூக்கிலிட்டு கொல்லும்படி மூன்று நீதிபதிகள் கொண்ட வங்காளதேச உச்ச நீதிமன்ற தீர்ப்பாயம் இன்று உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக மிர் குவாஸிம் அலியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.