2020–ம் ஆண்டுக்குள், 200–க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்களை தயாரிக்க போதுமான மூலப்பொருட்களை பாகிஸ்தான் வைத்திருக்கும் என்று அமெரிக்காவில் உள்ள ‘வெளிவிவகாரங்களுக்கான கவுன்சில்’ கூறியுள்ளது. அதன் அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–
உலகின் பல பகுதிகளில் அணு ஆயுதங்கள் குறைந்து வந்த போதிலும், ஆசிய கண்டத்தில் அதிகரித்து வருகிறது. இந்தியா, 90 முதல் 110 அணு ஆயுதங்களை தயாரிக்க தேவையான மூலப்பொருட்களை வைத்திருக்கும். சீனாவோ, 250 அணு ஆயுதங்களை வைத்திருக்கும் என்று கருதுகிறோம்.
பாகிஸ்தான், 2020–ம் ஆண்டுக்குள், 200–க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்களை தயாரிக்க தேவையான மூலப்பொருட்களை வைத்திருக்கும். என்ன காரணத்துக்காக இந்த ஆயுதங்களை வைத்திருக்கிறோம் என்று பாகிஸ்தான் அதிகாரபூர்வமாக எதுவும் கூறவில்லை.
ஆனாலும், இந்தியாவின் அச்சுறுத்தலை தடுக்கவே இவற்றை வைத்திருப்பதாக பாகிஸ்தான் சூசகமாக உணர்த்தி உள்ளது. மேலும், இந்த ஆயுதங்கள், தீவிரவாதிகள் கைக்கு போவதை தடுக்க அமெரிக்கா படையெடுக்கும் ஆபத்தை தவிர்க்கவும் பாகிஸ்தான் இந்த ஆயுதங்களை வைத்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.