ஜெர்மனி நாடு “இஸ்லாமியமயம்’ ஆக்கப்படுவதாகக் கூறி, தலைநகர் பெர்லினில் திங்கள்கிழமை நடைபெற்ற கண்டன ஊர்வலத்தில் 17,000 பேர் கலந்துகொண்டனர்.
ஜெர்மனியில், வலதுசாரி இயக்கமான “ஐரோப்பிய, அமெரிக்க இஸ்லாமியமயமாக்கலுக்கு எதிரான உண்மை ஐரோப்பியர்கள்’ (பெகிடா) என்ற அமைப்பு அந்த நாட்டு குடியேற்றச் சட்டங்களில் மாற்றம் கொண்டுவர வேண்டுமென வலியுறுத்தி வருகிறது.
ஏற்கெனவே, நாஜிக்களின் இனவெறிக் கொள்கைகள் காரணமாக கசப்பான வரலாற்றைக் கொண்டுள்ள ஜெர்மனியில், மீண்டும் இனவாதம் தலைதூக்கக் கூடாது எனக் கூறி, அந்த இயக்கத்துக்கு அந்த நாட்டுத் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
எனினும் எதிர்ப்புகளையும் மீறி, பெகிடா அமைப்புக்கு மிக வேகமாக ஆதரவு அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
கடந்த அக்டோபர் மாதம் அந்த அமைப்பு நடத்திய ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் சில நூறு பேர்களே பங்கேற்ற நிலையில், திங்கள்கிழமை நடைபெற்ற ஊர்வலத்தில் சாதனை அளவாக 17,000 பேர் கலந்து கொண்டனர்.
தாங்கள் நாஜிக்கள் அல்ல எனவும், நாட்டில் கிறிஸ்துவக் கலாசாரம் சீரழிக்கப்படுவதை மட்டுமே தாங்கள் எதிர்ப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே, பெஜிடா அமைப்பின் ஊர்வலத்துக்கு எதிராக, 4,500 பேர் பெர்லினில் அதே நாள் ஊர்வலம் சென்றனர்.
யூதப்படுகொலைகளை நடத்திய ஜெர்மனியில், இனியும் இனவெறி, தேசியவெறிக்கு இடமில்லை என எதிர் அமைப்பினர் கூறினர்.