பஸ் வண்டிகளுக்கு தேவையான உறுதிப்பாகங்களுக்கு தட்டுப்பாடு இடம்பெற்று வருவதால் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்த முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.
அதனால் இந்த பிரச்சினைக்கு அரசாங்கம் உடனடியாக தீர்வை பெற்றுத்தராவிட்டால் பயணிகள் போக்குரவத்து சேவையில் இருந்து அடுத்த வாரம் முதல் ஒதுங்கிக்கொள்வோம் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ண தெரிவித்தார்.
கொழும்பில் திங்கட்கிழமை (25) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
பஸ் வண்டிகளுக்கு தேவையான உதிரிப்பாகங்கள் இல்லாமை காரணமாக பயணிகள் போக்குவரத்து சேவை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது.
பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் பஸ் வண்டிகள் அடிக்கடி பழுதுபார்க்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. இவ்வறான நிலையில் தேவையான உதிரிப்பாகங்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்படுகின்றது.
அதனால் குறித்த பஸ் வண்டியை பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்த முடியாது.
குறிப்பாக பஸ் வண்டிகளுக்கு தேவையான டயர்,பெட்டரி,பிரேக் லைனர் உட்பட பல உதிரிப்பாகங்கள் இல்லாமை காரணமாக பல பஸ் வண்டிகள் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்த முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.
எனவே இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் தவறி விட்டால், அடுத்த வாரம் முதல் அனைத்து தனியார் பஸ் வண்டிகளும் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என்றார்.