ரஜினி நடிப்பில் ‘எந்திரன்’ படம் 2010–ல் ரிலீசானது. ரஜினி ‘ரோபோ’ விஞ்ஞானி என இரு வேடங்களில் நடித்து இருந்தார். நாயகியாக ஐஸ்வர்யாராய் நடித்தார். ஷங்கர் இயக்கினார். இப்படம் வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்தது.
இதையடுத்து இதன் இரண்டாம் பாகத்தை படமாக்கும் முயற்சியில் ஷங்கர் ஈடுபட்டார். இதற்கான திரைக்கதையை தற்போது உருவாக்கி விட்டாராம். விரைவில் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டு உள்ளார்.
இந்த நிலையில் இப்படத்துக்கான நடிகர், நடிகைகள் தேர்வு விறுவிறுப்பாக நடக்கிறது. இதில் ரஜினிக்கு இரு வேடங்கள் இல்லை. ஒரே கேரக்டராகவே நடிக்கிறார். தமிழ், இந்தி ஆகிய இருமொழிகளில் இப்படத்தை எடுக்க இருப்பதால் தமிழ் பதிப்பில் வில்லனாக நடிக்க விக்ரமையும், இந்தி பதிப்பில் வில்லனாக நடிக்க அமீர்கானையும் தேர்வு செய்து இருந்தனர்.
தற்போது அந்த திட்டம் கைவிடப்பட்டது. தமிழ் பதிப்பில் வில்லனாக நடிக்க ஷாருக்கானை தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தி பதிப்பில் ஷாருக்கான் நாயகனாகவும் ரஜினி வில்லனாகவும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.