எதிர்வரும் 10ஆம் திகதி நம்பிக்கையில்லா தீர்மான விவகாரத்தில் உரிய விளக்கம் அளித்து பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இத்தகைய பரபரப்பான சூழலில் ராகுல் காந்தி இல்லாதது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் குறையாக இருந்தது. இதற்கு தீர்வு சொல்லும் வகையில் மக்களவை செயலகம் மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது, ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் திரும்ப பெறப்பட்டது. இதன்மூலம் உடனடியாக வயநாடு மக்களவை தொகுதி எம்.பி பதவி மீண்டும் ராகுல் காந்தி வசம் வந்தது. இனி நாடாளுமன்றத்திற்கு தாராளமான செல்ல முடியும்.
ஆளுங்கட்சியின் செயல்பாடுகள் குறித்தும், பிரதமர் மோடி – அதானி நட்பு பற்றியும், பற்றி எரியும் மணிப்பூர் விவகாரம் தொடர்பாகவும் கேள்விகளால் துளைத்தெடுக்க முடியும்.
ஏனெனில் கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது அதானி குழுமம் செய்த முறைகேடுகள் தொடர்பாக ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை மிக முக்கிய பங்கு வகித்தது. இதுபற்றி நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசுகையில், மோடி உடன் அதானி வெளிநாட்டு பயணம் மேற்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். இவரது பேச்சை முடக்கும் வகையிலேயே 5 ஆண்டுகளாக தள்ளி போடப்பட்ட வழக்கை தூசு தட்டி எம்.பி பதவியை தகுதி நீக்கம் செய்யும் வரை கொண்டு சென்றதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டினர்.
அதாவது, மோடி குறித்து அவதூறாக பேசியதாக குஜராத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அதிகபட்ச தண்டனையாக 2 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டது. இதனால் மக்களவை விதிகளின் படி எம்.பியை இழக்க நேரிட்டது.