சிங்கப்பூரின் புதிய ஜனாதிபதியாக யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தர்மன் சண்முகரத்தினம் 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
சிங்கப்பூரில் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேற்று நடைபெற்றது. இதில் தமிழரான தர்மன் சண்முகரத்தினம் வெற்றி பெற்றுள்ளார் என அந்நாட்டுத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
1957 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் பிறந்தவர் தர்மன். இவரது பாட்டனார் இலங்கை, யாழ்ப்பாணம் மாவட்டம், ஊரெழு என்ற இடத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.
இந்நிலையில் ஈழத்தமிழரின் வம்சமான தர்மன் சண்முகரத்தினம், சீன வம்சாவளியைச் சேர்ந்த காச்சோங் மற்றும் டான்தின் லியான் ஆகியோர் சிங்கப்பூர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டனர்.
இவர்கள் மூவர் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது. மூவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இருப்பினும் தர்மன் சண்முகரத்தினம் 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காகக் கெபினட் அமைச்சர் பதவியில் இருந்த தர்மன் சண்முகரத்தினம் தனது பதவியை இராஜிநாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.