ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் பரந்துபட்ட அரசியல் கூட்டணியொன்றை உருவாக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.
அதன் பிரகாரம் நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சிகளை ஓரணியில் இணைத்து பரந்தப்பட்ட அரசியல் கூட்டணியொன்றை உருவாக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பல்வேறு கட்சித் தலைவர்களுடன் பேச்சுக்களில் ஈடுபட்டு வருகின்றார்.
எதிர்க்கட்சிகளின் விசேட பேச்சு நேற்றுமுன்தினம் சஜித் பிரேமதாஸ தலைமையில் நடைபெற்றது.
தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் நாடு எதிர்நோக்கும் சவால்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன் எதிர்காலத்தில் எதிர்க்கட்சிகளின் பரந்த அரசியல் கூட்டணியைக் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு அவதானம் செலுத்தப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட இலங்கை மக்கள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசங்க நவரத்ன உள்ளிட்ட அக்கட்சியின் பிரதிநிதிகள் குழுவினரும், எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடல்களை நடத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.
எதிர்காலத்தில் இந்தக் கலந்துரையாடல்களை நடத்துவதன் முக்கியத்துவத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
பரந்துபட்ட கூட்டணியை உருவாக்க ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு எடுத்த தீர்மானங்களின் பிரகாரம், எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் தொடர்ந்தும் பேச்சு நடத்தவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இந்தச் சந்திப்பில் சுட்டிக்காட்டியதுடன், இவ்வாறான ஒரு பரந்த கூட்டணியில் இணையுமாறு இலங்கை மக்கள் கட்சிக்கு அழைப்பும் விடுத்தார்.
இந்தச் சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் இலங்கை மக்கள் கட்சியின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.