உலகின் அதிகாரம் மிகுந்த அமைப்புகளில் ஒன்றான ஜி – 20 அமைப்பின் அரச தலைவர்கள் உச்சி மாநாடு இந்தியாவில் நாளை ஆரம்பமாகின்றது.
ஜி – 20 அமைப்பின் தலைமை பதவியை இம்முறை இந்தியா வகிக்கின்றது. இதன்படி இந்தியாவின் தலைமையில், பல்வேறு நகரங்களில் ஜி – 20 பிரதிநிதிகள் பங்கேற்ற பல்வேறு துறை சார்ந்த கூட்டங்கள் நடைபெற்றன.
இதன் தொடர்ச்சியாக ஜி – 20 அரச தலைவர்கள் உச்சி மாநாடு டில்லியில் நாளையும் (சனிக்கிழமை), நாளைமறுநாளும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகின்றது.
இந்தியா தலைமை தாங்கி நடத்தும் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதைப்போல் உறுப்பினர் அல்லாத பல்வேறு நாடுகளும் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்கின்றன.
உலக வல்லரசு நாடுகள் உட்பட முக்கியமான நாடுகளின் தலைவர்கள் பங்கேற்வுள்ளதால், இதற்காக தலைநகரில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மிகுந்த உத்வேகத்துடன் ஜி – 20 உச்சி மாநாட்டுக்கான தயாரிப்புகளையும் அரசு இறுதி செய்து வருகின்றது.
பிலிப்பைன்சில் இருந்து மாநாட்டில் பங்கேற்க ஆஸ்திரேலியாப் பிரதமர் டில்லி செல்கின்றார். அமெரிக்கா ஜனாதிபதியும் இன்று இந்தியா வருகின்றார்.