தமிழில் மட்டுமல்லாமல் இந்தி, ஆங்கிலம் என வட இந்திய மற்றும் சர்வதேச மொழியில் நடித்து ஹொலிவுட் நட்சத்திர நடிகர் என்ற அடையாளத்தை பெற்றிருக்கும் நட்சத்திர நடிகரான தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘இட்லி கடை ‘எனும் திரைப்படத்தில் பான் இந்திய நட்சத்திர நடிகராக உயர்ந்து வரும் அருண் விஜயும் இடம் பெற்றிருக்கிறார் என படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.
நடிகரும், இயக்குநருமான தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இட்லி கடை’ எனும் திரைப்படத்தில் தனுஷ் , அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே, பிரகாஷ் ராஜ் , சமுத்திரக்கனி , ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். கிரண் கௌசிக் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ‘இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். உணர்வு பூர்வமான படைப்பாக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் டான் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் பத்தாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என உறுதிபட அறிவித்திருக்கும் இப்படத்தில் அருண் விஜய் நடித்து வருவதாக படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்துடன் தெரிவித்திருக்கிறார்கள்.
இதன் காரணமாக இந்தத் திரைப்படத்தில் அருண் விஜய் வில்லனாக நடிக்கக்கூடும் என ஒரு பிரிவினரும், தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருக்க கூடும் என மற்றொரு பிரிவினரும் தெரிவித்திருக்கிறார்கள்.
இதனிடையே அஜித்குமார் நடிப்பில் தயாராகி வரும் ‘குட் பேட் அக்லி ‘ எனும் திரைப்படமும் இதே ஏப்ரல் மாதம் பத்தாம் திகதி என்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருப்பதால் ஒரே திகதியில் தனுஷ் – அஜித் குமார் நடிப்பில் உருவான திரைப்படங்கள் வெளியாவதால், இருதரப்பு ரசிகர்களும் உற்சாகமடைந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.