பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தனிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரான அவர், மட்டக்களப்பில் உள்ள கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் வைத்து நேற்று மாலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு இரவு கொழும்புக்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாகவே பிள்ளையான் கைது செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆம் திகதி, கொழும்பு 7இல் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்குபற்றி இருந்தபோது, பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டிருந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக 18 ஆண்டுகளுக்குப் பின்னர் பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, பிள்ளையான் கைது செய்யப்பட்டதை அடுத்து மட்டக்களப்பில் பல இடங்களில் பட்டாசு கொளுத்திக் கொண்டாடப்பட்டது.
ஆட்கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்தக் கடத்தல் தொடர்பில் மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என்று அறியமுடிந்தது.