இனவிடுதலைப் பாதையின் இசை அடையாளங்களில் ஒன்று மறைந்தது. தமிழன் என்ற உணர்வுள்ள ஒவ்வொருவரின் மனதையும் கனக்கவே செய்யும்.
தன் குரலால் மக்கள் மனங்களில் குடிகொண்ட ஒருவர். வரலாற்று வெற்றிகளையும், வரலாற்று நாயகர்களின் இழப்புக்களையும் தனது குரலால் எங்கள் மனங்களில் கனமாகப்பாதித்தவர். ஒரு நீண்ட விடுதலைப்பயணத்தை இசையால் அடையாளப்படுத்தியது மட்டுமல்ல, அந்த விடுதலைக்காக தன் குடும்பத்தில் விதையையும் விதைத்தவர். அவரது மகன் இசைஅரசன், ஒரு பாடகர் வித்தாய்ப்போனதை அறிவோம்.
நாங்கள் பார்த்து ரசித்த நேரடி
இசை நிகழ்வுகளில் எல்லாம் ஆஸ்தான பாடகர்களில் ஒருவராக சாந்தன் இருப்பார், சிட்டு, சாந்தன் இவர்கள் இல்லாமல் ஈழத்தின் இசை கனதியாய் இருந்திருக்காது என்பது மறக்கமுடியாத உண்மை ..
மனதுக்கு பிடித்தவரின் குரலும் இசையும் எவ்வாறு ஆறுதல் தரும் என்பதை அறிந்த காலம் அது , 2009 க்கு பின் அவரோடு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு காலம் ஒன்றாய் ..
விபரிக்க முடியாத வலிகளையும் மனவழுத்தங்களையும் சுமந்து நின்ற காலம், சாந்தனும் அவரது மகன் கோகுலனும் ஒன்றாய்..
மனம் கனக்கின்ற போதெல்லாம் அருகில் போய் இருந்து “சாந்தண்ணை ஒருபாட்டு பாடுங்கோ” என்று கேட்ப்போம். சீர்காழி கோவிந்தராஜனின் பாடல்கள் அசலாக கணீர் என்று காதுகளில் பாய்ந்து இதயத்தை வருடும். தனிமையை மறந்து ரசித்திருப்போம் .”சிறையில் சிட்டுக்குருவி” அவர்தான். பலரின் மனப்பாரங்களை இறக்கி வைத்த ஒருவர். மறக்க முடியாத காலங்கள், வார்த்தையின் வசப்படுத்தல்களுக்குள் எழுதமுடியாத உணர்வுகள், சாந்தன் அண்ணையோடு அந்த இரண்டு ஆண்டுகள். தனது இயல்பான நகைசுவைப்பேச்சாற்றலால் எங்களை சிரிக்க வைக்க தவறியதும் இல்லை.
ஒரு கலைஞனின் மரணம் அவரை மனதில் இருந்து அழித்து விடாது. கொக்கட்டிச்சோலையில் ஒலிக்கும் “பிட்டுக்கு மண்சுமந்த பெருமானாரும்” இன்னும் அவர் பாடிய பாடல்களும் ஈழத்தமிழ் உள்ளவரை இசையாய் மக்கள் மனங்களில் வாழவைத்துக்கொண்டே இருக்கும்.
சோதிநாதன் பரணீதரன்