ஈழத்து கவிஞர்களில் முக்கியமாகப் பேசப்படும் ஒருவரான கவிஞர் சேரன் லண்டன் வருகை தந்திருந்தார். இவரது “எரிந்துகொண்டிருக்கும் நேரம்” (In A Time Of Burning) என்ற கவிதை நூல் தொடர்பான ஒரு சந்திப்பு மத்திய லண்டனில் கடந்த 8ம் திகதி நடைபெற்றது. ஆங்கிலம் தமிழ் என இரண்டு மொழிகளிலும் ஒவ்வொரு கவிதைகளும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவரது கவிதைகளை விருதுபெற்ற மொழிபெயர்ப்பாளர் லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம் மொழிபெயர்த்திருந்தார். இந்த நூலில் இருந்து சிறப்பான பல கவிதைகளை உணர்புபூர்வமாக இவர்கள் வாசித்தளித்தமை இவ் நிகழ்வை சிறப்பித்தன.
இலங்கை யுத்தத்தின் இறுதிக்காலப் பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவங்களை வெளிப்படுத்தும் ஐஸ் அண்ட் பயர் (Ice and Fire) என்ற நாடகத்தின் ஆசிரியர் கிறிஸ்டியன் பேக்கன், விருதுபெற்ற மொழிபெயர்ப்பாளர் லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம், கவிஞர் சேரன், பி.பி.சி யின் முன்னாள் செய்தியாளரும், “ஈழம் – சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள்” (Still Counting the Dead) என்ற பிரபலமான நூலின் எழுத்தாளருமான பிரான்சிஸ் ஹாரிசன், உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு சுவைமிக்க பல நாவல்களை எழுதிவரும் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட ரோமா திரோன் ஆகியோர் கலந்துகொண்டு தமது ஆக்கங்களின் சிறு பகுதிகளை வாசித்தளித்தனர்.
இவ் நிகழ்வினை ARC Publications மற்றும் English Pen போன்ற அமைப்புக்கள் ஒழுங்கு செய்திருந்தன .