கொழும்பில் இருந்து யாழ். நோக்கிச் சென்ற அதிசொகுசு பஸ் ஒன்று வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இன்று (13.03.2014) அதிகாலை 4.30 மணியளவில் தீப்பற்றியதில் முழுமையாக எரிந்து சாம்பலாகியுள்ளதென கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
பயணிகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சமயம் கனகராயன்குளம் குறிசுட்டகுளம் பகுதியில் பஸ்ஸில் திடீரென பிடித்த தீ வேகமாக பரவிய நிலையில் பயணிகள் அதிஸ்டவசமாக எவ்வித பாதிப்புமின்றி பஸ்ஸை விட்டு ஓடியுள்ளனர்.
இந்நிலையில் பயணிகளின் உடமைகள் அனைத்தும் எரிந்துள்ள நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த கனகராயன்குளம் பொலிஸார் நீரை கொண்டு தீயை கட்டுப்படுத்தியிருந்தனர்.
எனினும் பஸ் முழுமையாக எரிந்த நிலையில் அதனுள் கொண்டு செல்லப்பட்ட பெறுமதியான பொருட்களை மீட்க முடியாதுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, பஸ்ஸில் சென்ற சுமார் 50 பயணிகளும் வேறு ஒரு பஸ்ஸில் யாழ். நோக்கி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.