டெல்லி கலவரத்தில் பொலிஸார் மனித உரிமை மீறல் சம்பவங்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்த விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆறு மாதங்களில் டெல்லியில் இடம்பெற்ற கலவரங்கள் தொடர்பாக சர்வதேச மன்னிப்புச்சபை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் டெல்லி பொலிஸார் மீது கடுமையான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக கலவரத்தைத் தடுக்கத் தவறியமை, பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளுக்குச் செல்வதைத் தடுத்தமை, முஸ்லிம் சமூகத்தினர் மீது நடத்திய தாக்குதல்கள் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், குறித்த கலவரம் தொடர்பாக பதியப்பட்டுள்ள வழக்குகளில் ஒன்றில்கூட டெல்லி பொலிஸார் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குறிப்பிடப்படவில்லை எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, டெல்லி பொலிஸார் மத்திய உட்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.0Shares