தென் அமெரிக்க நாடான சிலியில் நேற்று இரவு 8.2 ரிக்டர் அளவில் பயங்கர பூமியதிர்ச்சி ஏற்பட்டது. இந்த பூகம்பம் காரணமாக 5 பேர் பலியாகியுள்ளனர். சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிலி நாட்டில் உள்ள கடற்கரையை ஒட்டியுள்ள பொதுமக்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற சிலி அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. Iquique என்ற நகரில் உள்ள பெண்கள் சிறைச்சாலை பூகம்பம் காரணமாக பயங்கர சேதம் அடைந்தது. இதை பயன்படுத்தி கொண்ட பெண் கைதிகள் சுமார் 300 பேர் வரை தப்பித்துவிட்டதாக உள்ளூர் தொலைக்காட்சி ஒன்று தெரிவித்துள்ளது.
சிலி நாட்டின் அதிபர் Michelle Bachelet, உடனடியாக பாதிப்படைந்த பகுதிகளுக்கு ராணுவத்தை அனுப்பி மீட்புப்பணியை துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யவும், சிறையில் இருந்து தப்பித்தவர்களை மீண்டும் பிடிக்கவும் சுமார் 400 இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.
நாட்டின் பல பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் நிலையங்கள் தீப்பிடித்து எரிவதாகவும், கணக்கிட முடியாத அளவுக்கு பொருட்சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
கடைசியாக வந்த தகவலின்படி தப்பித்து சென்ற 300 பெண் கைதிகளில் சுமார் 40 பேர் வரை பிடிபட்டதாக கூறப்படுகிறது. மீண்டும் சுனாமி வரும் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளதால், சிலி மக்கள் பெரும் பதட்டத்துடன் நேற்றைய இரவை கழித்தனர்.