2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் முடிவுற்ற யுத்தம் பேசுகின்ற கதைகள் பல,அவற்றுள் பேசாப்பொருளாக மறைந்திருக்கும் துயரங்களும் பல. வேருடன் தூக்கி எறியப்பட்ட மக்களை வீதி வீதியாகத் தேடிச்சென்று மருத்துவம் பார்த்த மகத்தான மனிதர்கள் பற்றிய கதை இது…..வன்னி மண்ணின் மகோன்னதமான காலத்தில் மருத்துவதுறையின் எழுச்சியும் வீழ்ச்சியும் எவ்வாறு நடந்தது என கூறும் கதை இது….
முள்ளிவாய்க்கால் வைத்தியர் என அறியப்பட்ட வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி அவர்கள் கிளிநொச்சியில் பிறந்து அதேமாவட்டத்தில் கல்வி கற்று மருத்துவ பீடம் சென்றவர். வைத்தியராக வெளியேறியவர் இன்றுவரை அந்த மண்ணில் சேவைசெய்து வருகின்றார். முள்ளிவாய்க்கால் வரை தனது அர்ப்பணிப்பான சேவையால் பல உயிர்களை காத்து நின்றவர். அந்த நாட்களில் மக்களுடன் அவரும் அவருடன் இருந்த மருத்துவக்குழுவும் செய்த சேவைகள் பற்றி மனம் திறக்கின்றார் …..
– வணக்கம்LONDON –
வன்னிப்பகுதி ஓமந்தைக்கு அப்பால் விடுதலைப்புலிகளின் பூரணகட்டுப்பாட்டில் இருந்த பிரதேசத்தில் காவல்துறை மற்றும் நீதிசேவை என்பன விடுதலைப்புலிகளின் கட்டமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்தது, ஆனால் கல்வி, சுகாதாரம் என்பன அரச தினணக்களங்கள் சுயமாக இயங்குவதற்கு ஏற்ற சூழ்நிலை காணப்பட்டு இருப்பினும் அவற்றை ஒழுங்குபடுத்தவும் கட்டுப்படுத்தவும் மேலதிக வலுச்சேர்க்கவும் அந்ததந்த துறைகளுக்கு இணையான அமைப்புகள் இயங்கி வந்தன. அந்தவகையில் தமிழீழ சுகாதார சேவையினர் அரச மருத்துவ சேவையை ஒழுங்குபடுத்தி வலுச்சேர்க்கவும் உதவி புரிந்து வந்தனர். இதற்கு அவர்கள் பலரை பயிற்றுவித்து சேவையில் ஈடுபடுத்தினார்கள்.
1990ம் ஆண்டு காலப்பகுதியில் அரச பல்கலைக்கழகங்களின் MBBS இணையான பயிற்சியினை யாழ்ப்பாணப்பகுதியில் ஆரம்பித்தனர். 2002ம் ஆண்டு காலப்பகுதியில் சுமார் முப்பதுக்கு மேற்பட்டவர்கள் இப்பயிற்சியினை முடித்து வெளியேறினார்கள். இவர்கள் அனைவரும் விடுதலைப்புலிகளின் மருத்துவமனையில் பணியாற்றியதுடன் பல சந்தர்ப்பங்களில் அரச வைத்தியர்களுடன் அரச வைத்தியசாலைகளிலும் பணி புரிவதற்கு அந்நாட்களில் மிகவாய்ப்பாக இருந்தது. குறிப்பாக இடம்பெயர்காலங்களில் முள்ளிவாய்க்கால் வரை அவர்கள் தமது சேவையை தொடர்ந்து பல உயிர்களை காப்பாற்றினார்கள். குறிப்பாக பல பொதுமக்களுக்கு சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டு அவர்களை காப்பாற்றியமை மறக்க முடியாததும் போற்றப்பட வேண்டியதுமான வரலாறு ஆகும்.
பதிவு வைத்திய அதிகாரிகளுக்கு (Registered Medical Practitioner) இணையான ஒரு பொதுப்பயிற்சியினை தமிழீழ சுகாதார சேவையினர் நடாத்தி வந்தனர். ஆனால் அப்பயிற்சியில் தேர்ந்து எடுக்கப்பட்ட அனைவரும் விடுதலைப்புலிகள் அமைப்பில் சம்பந்தப்படாதவர்கள். எனவே அவர்களை பின்னாளில் பின்தங்கிய பிரதேசங்களில் பொதுமக்கள் சேவைக்கு ஈடுபடுத்தும் நோக்குடன் இப்பயிற்சி நடாத்தி முடிக்கப்பட்டது. இவர்களில் பலரும் போர்க்காலப்பகுதியில் இடம்பெயர் நிலையங்களில் வெளிநோயாளர் பிரிவில் கடமை புரிந்தது முக்கியான விடயமாகும்.
தமிழீழ சுகாதார சேவையினர் அறிவியல்நகர்ப்பகுதியில் Institute of Health Science (IHS) என்னும் கற்கை நிலையத்தை நடாத்தி வந்தனர். இந்நிலையத்தில் வடக்கு கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தாதியர் (High Diploma In Nursing) பயிற்சிக்ககாக மாணவர்களையும் மருத்துவ டிப்ளோமா ( Diploma In Medicine) கற்கை நெறிக்கு மாணவர்களையும் பயிற்சிக்காக இணைத்து கொண்டனர். இதுதவிர வன்னிப்பகுதியில் இயங்கிய பல தனியார் மருத்துவ மருந்தகங்கள் நடாத்தி வந்தவர்கள் உரிய மருந்தாளருக்கான தகுதியை கொண்டு இருக்கவில்லை. எனவே மருந்தகம் நடாத்தியவர்களையும் ஏனையவர்களையும் இணைத்து மருந்தாளர் டிப்ளோமா (Diploma In Pharmacy) பயிற்சிக்காக முப்பது மாணவர்களை பயிற்றுவித்தனர். இதுதவிர மாணவர்களை உணவு பாதுகாப்பு மற்றும் சத்துணவுக்கான (Diploma In Food and Nutrition) பயிற்சியினையும் நடத்தினார்கள். மேற்படி பயிற்சிகளை வழங்கியமையால் இவர்களில் அனைவருக்கும் போர்க்காலங்களில் வைத்திய சேவைக்கு வலுச்சேர்ப்பவர்களாக இருந்தார்கள்.
மேற்படி பயிற்சியினை மேற்கொண்டவர்களில் தாதிய மாணவர்கள் கிளிநொச்சி பொதுவைத்தியசாலைக்கு பூரணமாக இணைத்து கொள்ளப்பட்டனர். போர் உக்கிரமடைந்த காலப்பகுதியில் இவர்கள் முழுநேர ஊழியர்களாக கடமை புரிந்தனர். குறிப்பாக கிளிநொச்சி வைத்தியசாலையில் கடமையாற்றிய பின்னர் இடம்பெயர் வைத்திய சாலைகள் பலவற்றிலும் கடமையாற்றினார். இறுதியில் மாத்தளன் வைத்தியசாலையில் கடமை செய்து இருந்தனர். இவர்கள் அனைவரும் முழுநேர வைத்தியசாலைப்பகுதியில் தங்கியிருந்து பலகடமைகளை நிறைவேற்றினார்கள். சத்திரசிகிச்சை கூடங்களிலும் விடுதிகளிலும் வேறு பல இடங்களிலும் அரச தாதிகளின் உதவியுடன் சிறப்பாக கடமை செய்து வந்தனர். இதற்கான அனுசரணையை சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனம் (IMHO) வழங்கிவந்தது. இதுதவிர மருத்துவ டிப்ளோமா கற்கை நெறியை மேற்கொண்ட மாணவர்கள் பலர் இடம்பெயர் வைத்தியசாலைகாளில் வெளிநோயாளர் பிரிவில் கடமை ஆற்றினார்கள். இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து ஊக்கப்படுத்தி மருத்துவ சேவை இடம்பெயர்காலங்களில் வழங்கப்பட்டது. இவர்கள் அனைவரதும் உன்னதமான பணிக்காக பராட்டி கௌரவிக்கப்பட வேண்டும்.
தொடரும்……….
வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி | கிளிநொச்சியில் இருந்து
முன்னைய அங்கங்கள்…….
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-1/
http://www.vanakkamlondon.com/mullivaikaal-2/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-3/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-4/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-5/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-6/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-7/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-8/